Oktober 23, 2024

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் குழப்பம்?

யாழ்.நகரிலுள்ள இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் யாழ்.எவ்எப்ம் அலுவலகத்திற்கு கொழும்பிலிருந்து வருகை தந்த அலுவலர்கள் தொடர்பில் சர்ச்சைகள் மூண்டுள்ளது.

எந்தவொரு அனுமதியுமின்றி கொழும்பிலிருந்து உரிய சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றாது இவர்கள் யாழ்.நகரிலுள்ள இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன கோபுர திருத்த வேலைகளிற்கென இன்று காலை வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் ஒரே வாகனத்தில் வருகை தந்தவர்கள் யாழ்ப்பாணம் இராசாவின் வீதியிலுள்ள யாழ்.எவ்எப்ம் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்து தங்கியிருந்த நிலையில் அயல் பொதுமக்களால் காவல்துறை மற்றும் பொதுசுகாதார பிரிவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொதுசுகாதார பிரிவினர் மற்றும் காவல்துறையினர் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுக்க கொழும்பு தலைமையகமோ ஆளுநர் அலுவலகம் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களமென தலையீட்டிற்கு தடை விதிக்க அழுத்தங்களை வழங்க தொடங்கியுள்ளது.

இதனிடையே கடமையிலிருந்த உள்ளுர் பணியாளர்கள் ஒருபுறம் அச்சத்தில் உறைந்திருக்க மேல்மட்டங்களிலிருந்து கண்டுகொள்ளாதிருக்க அழுத்தங்கள் அனைத்து மட்டங்களிலும் பாய்ந்திருக்கின்றது.

நிமிடத்திற்கொருமுறை கொவிட் விழிப்பு பற்றி பேசும் வானொலி தனது கொழும்பு பணியாளர்களை எந்தவொரு முன்னெச்சரிக்கை முகாந்திரமும் இன்றி அனுப்பி வைத்தமை அயல் குடியிருப்பு மக்களிடையே அதிர்ச்சியையும் மறுபுறம் பயத்தையும் தோற்றுவித்துள்ளது.