Mai 3, 2024

விடுதலைபுலிகளின் தலைவரை முதலில் பேட்டி எடுத்த பெண்மணி! வெளியான முக்கிய செய்தி!

அனிதா பிரதாப் இவர் ஒரு உலகறிந்த ஒரு சிறந்த ஊடகவியலாளர் என்பதுடன் அவர் ஒரு அரசியல் கள ஆய்வாளரும் கூட.

கேரள மாநிலம் கோட்டயத்தில் பிறந்து 1980களில் பத்திரிகை துறையில் கோலோச்சியவர் அனிதா பிரதாப். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் அருண் ஷோரி ஆசிரியராக இருந்த போது பணிக்கு சேர்ந்தார். பின்னர் சிறிது காலம் “சண்டே” பத்திரிகையில் பணியாற்றினார்.

அப்போதுதான் 1984ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் முதலாவது பேட்டி வெளியானது. அந்தப் பேட்டியை எடுத்தவர் அனிதா பிரதாப். இதன் மூலமாக சர்வதேச நாடுகளின் கவனத்தையும் பெற்றார் அனிதா பிரதாப்.

அப்போது இலங்கையின் ஒரு பிரபல தமிழ் பத்திரிகைக்கு அவர் கவலையோடு வழங்கிய செவ்வியில் இருந்து சில துளிகள்,

“பிரபாகரனில் பல விசயங்களில் நான் ஈர்க்கப்பட்டதால் அவரது சுயசரிதையை எழுத விரும்பினேன். அவரை சந்தித்துமுள்ளேன்.

அவரைச் சந்திக்கும் ஏற்பாட்டில் அவரின் போராளிகளோடு முகாமில் இரவைக் கழித்தேன். அங்கே அவர்களது கட்டுப்பாடான சீரிய ஒழுக்க விழுமியங்களைக் கண்டு ஆச்சரியமடைந்தேன்.

இந்த நூற்றாண்டில் நானறிந்த இரு பெரும் புரட்சியாளர்களில் ஒருவர் சேகுவேரா.மற்றவர் பிரபாகரன். அதேவேளை இலங்கை யுத்தத்தில் இருவர் தத்தமது மக்களுக்காக போரிட்டனர். ஒருவர் மகிந்த, மற்றவர் பிரபாகரன்.

யதார்த்தம் என்னவென்றால் யுத்தத்தில் இருவரில் ஒருவர் கட்டாயம் வென்றேயாகவேண்டும். அதில் இன்று மகிந்த வென்றுள்ளார்.

இனி… தம் மக்களுக்காக போராடி மடிந்த பிரபாகரனின் இடத்தை நிரப்புவதற்கு எவருமே இல்லை. எப்படியோ இப்போது ஆயுதம் மௌனிக்கப் பட்டுவிட்டது.

தமிழர் தரப்பில் இனி அதை முன்னெடுக்கக் கூடியவர்கள் யாருமே இல்லை.தமிழர்கள் இடம் இப்போது வெற்றாக உள்ளது. இந்த நிலையில் தமிழர் முன்னுள்ள தெரிவு… எவ்வகையிலேனும் வென்ற மகிந்தவோடு இணங்கிப் போவதேயாகும். இதுவே தமிழர் தரப்பின் இன்றைய யதார்த்தம் ஆகும் என அனிதா பிரதாப் கூறி இருந்தார்.

ஆக… இதைவிட தமிழர் கள அரசியல்/பூகோள அரசியல் நிலையைக் கணிக்கும் எவராலுமே நியாயபடுத்தக்கூடிய-யதார்த்த நிலையை வெளிப்படுத்த முடியாது.

ஏதோ… தங்கள் தங்கள் அரசியல் இருப்பையும்–சொந்த மற்றும் வாக்கு வங்கி குரோதத்தையும் மனதிலிருத்தி, வெளி நாடுகளில் இருந்தோ, அல்லது உள்நாட்டு முகமூடிகளாக மறைந்திருந்தோ… தங்கள் ஆற்றாமை-ஆசையைத் தீர்த்துக் கொள்ளலாமே தவிர, வேறு… ஆகப் போவது எதுவுமேயில்லை.

இதுவும் பிழையானால்…அப்படி எதிர்வாதம் செய்வோரது முடிவு/தந்திரோபாயம்தான் என்ன..? என்பதை பகிரங்கமாக முன்வைத்து அவர்கள் நேர்மையோடு களமிரங்க வேண்டுமேயல்லாது தமிழர்களை மேலும் காயப்படுத்தி, களப் பலியாக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.