Mai 2, 2024

வவுனியாவில் கைது:யாழில் விடுவிப்பு!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடுவதற்கு அனுமதி கோரிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவி உட்பட இருவர் இன்று வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கிற்கு நான்கு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வவுனியா ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.

இந்நிலையில் ஜனாதிபதியினை சந்திக்க வடக்கு கிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முற்பட்ட போது, காவல்துறையால் தடை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கோரி வடக்கு கிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதனைதொடர்ந்து காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதையடுத்து அமைதியின்மை ஏற்பட்டது.

ஆதன் தொடர்ச்சியாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கைது செய்யப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா உள்ளிட்ட குழுவினருக்கு இன்றையதினம் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு நீதவான் நீதிமன்றத்தினால் முன்னதாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட செயலகத்திற்குள் அத்துமீறி நுழைய முற்பட்டமை தொடர்பிலேயே  குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை நான்கு பேரிடமும் காவல்துறையினர் வாக்குமூலத்தைப் பதிவு செய்துவிட்டு காவல்துறையினர் பிணையில் விடுவித்துள்ளனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert