Mai 2, 2024

நமக்கு நாமே கொள்ளி

அகதித்தஞ்சம் கோரி யேர்மனியில் பதிவுசெய்தவர்களில் பலருக்கு „நீலப்புத்தகம்“ என்கிற Travel document கொடுக்கப்படும். (இதில் இலங்கைக்குப் பயணிக்கவியலாது). 2009 இற்குப் பிறகு இங்கு வந்து, அகதித்தஞ்சம் அனுமதிக்கப்பட்டு „நீலப்புத்தகம்“ வழங்கப்பட்ட நிலையில், அதை மாற்றி இலங்கைக் கடவுச்சீட்டில் வதிவிட அனுமதிப்பத்திரம் தருமாறு கேட்டு, பின்னர் இலங்கைக்கும் சென்று வந்துவிட்டார்கள் பலர்.
அவர்களது நிபந்தனைகளின் படி;
1. இலங்கையில் உயிர்வாழ்வதற்குரிய தகுந்த சூழல் இல்லையெனத் தஞ்சம் புகுந்து, வதிவிட அனுமதி பெற்று, மீளவும் அதை இலங்கைக் கடவுச்சீட்டுக்கு மாற்றிக்கொண்டு, விடுமுறைக்கு இலங்கை செல்கிறார்களெனின், அவர்களது ஆரம்ப வாக்குமூலம் பொய்யானதா ?
2. 2009 இன் பின்னர் இலங்கையில் உயிர் வாழ முடியாதென்று இங்கு வந்தவர்களில், 60 வீதமானோர் இலங்கை சென்று வந்திருக்கிறார்கள். இதன்போது அவர்களுக்கு அங்கே உயிரச்சுறுத்தல் இல்லையா ?
3.யேர்மனியின் குடியுரிமை பெற்றநபர் இலங்கை செல்லும்போது , ஏதாவது அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் அவர்கள் இலங்கையிலுள்ள யேர்மனியத் தூதுவராலயத்தில் பதிவுசெய்யமுடியும். ஆனால் இலங்கைக் கடவுச்சீட்டில் யேர்மனிய வதிவிட அனுமதி பெற்றவர் இலங்கை செல்லும்போது ஏதாவது அச்சுறுத்தல்கள் ஏற்படின் அவர் இலங்கையராகவே கணிக்கப்படுவார், அது தெரிந்தும் அச்சமின்றிப் பயணிப்பதன் பொருள் என்ன ?
இன்று சட்டவாளர்கள் சிலருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர்கள் கேட்ட கேள்விகளே இவை. இவற்றில் எந்தக்கேள்விக்கும் பதிலளிக்க இயலவில்லை. நம்மில் சிலரது „சுயநலப்போக்குகள்“ யேர்மனிய அரசால் நன்கு அவதானிக்கப்படுகிறது.
இன்று அப்பாவித் தமிழர்கள் கைதுசெய்யப்பட்டதில் இவ்வாறான காரணங்களும் அடங்கும்.