தமிழ் இளைஞர்கள் வன்முறைகளில் ஈடுபடக் கூடாது!


மஹிந்தவின் அடிவருடிகளின் ஏவல்களுக்கு எடுபட்டு தமிழ் இளைஞர்கள் யாரும் வன்முறைகளில் ஈடுபடக் கூடாது என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் வலியுறுத்தியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:
நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஒரு மாத காலமாக இலங்கையின் தலைநகர் கொழும்பில் ராஜபக்ஷ ஆட்சியாளர்களுக்கு எதிராக சிங்கள மக்கள் அணிதிரண்டு ராஜபக்ஷக்களை ஆட்சியில் இருந்து அகற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத ராஜபக்ஷ தரப்பினர் பாரிய விளைவுகளை ஏற்படுத்தியதன் காரணமாக அங்கு பாரிய கலகங்கள் ஏற்பட்டுள்ளன.
அமைதி வழியில் போராடி வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இதற்கு மேல் பொறுக்க முடியாத சூழ்நிலையில் கலகக்காரர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒற்றை நிபந்தனையோடு மூன்று நாட்களாக வன்முறையில் இறங்கியுள்ளனர்.
பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகி சென்று திருகோணமலையில் வந்து பதுங்கியிருக்கிறார். இந்தச் சூழ்நிலையில் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிராகவும் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராகவும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.ஆனால் வடக்கு – கிழக்கு பிரதேசத்திலுள்ள எட்டு மாவட்டங்களிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வன்முறைச் சம்பவங்களில் யாரும் ஈடுபடவில்லை.
இந்நிலையில் தென்னிலங்கையிலுள்ள ஒரு இனவாதக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒரு சில வழிகளில் தொடர்புகளை ஏற்படுத்தி வடக்கு- கிழக்கு இளைஞர்களை வன்முறைகளில் ஈடுபடத் தூண்டியுள்ளனர்.இது தொடர்பில் சில இளைஞர்கள் எமக்குத் தொடர்புகளை ஏற்படுத்தி தெரியப்படுத்தியுள்ளனர்.