Mai 9, 2024

உயிர் அச்சுறுத்தல்:நாட்டை விட்டு வெளியேறினார் -முல்லைத்தீவு நீதிபதி!

உயிர் அச்சுறுத்தல், தொடர் அழுத்தங்களால் முல்லைத்தீவு நீதிபதி பதவி துறந்து, நாட்டை விட்டு வெளியேறினார்!

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

இது குறித்து அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தவை வருமாறு,

குருந்தூர்மலை வழக்கில் நீதிபதி வழங்கிய கட்டளைகளை மாற்றியமைக்குமாறு தொடர்ச்சியாக அரச தரப்பால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மற்றும்  பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்  பாராளுமன்றத்திலும், பாராளுமன்றிற்கு வெளியிலும் எனக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். 

அண்மையில் எனக்கான (நீதிபதிக்கான) பொலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்ட அதேவேளை, புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக என்னைக் கண்காணித்துவந்தனர்.

சட்டமா அதிபர், என்னை (முல்லைத்தீவு நீதிபதியை) தனது அலுவலகத்தில் 21.09.2023ம் திகதி அன்று சந்திக்க  வருமாறு அழைத்து, குருந்தூர்மலை  வழக்கின் நீதிமன்றக் கட்டளைகளை மாற்றியமைக்கும்படி அழுத்தம் பிரயோகித்தார்.

குருந்தூர் மலை வழக்குடன் தொடர்புபடுத்தி எனக்கு (முல்லைத்தீவு நீதிபதிக்கு) எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் ( Court of Appeal) எனது தனிப்பட்ட பெயர் குறிப்பிடப்பட்டு இரண்டு வழக்குகள் கோப்பிடப்பட்டுள்ளன.

இவற்றின் அடிப்படையில் எனக்கு நேர்ந்த உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக நான் மிகவும் நேசித்த எனது நீதிபதிப் பதவிகள் அனைத்தையும் துறந்துள்ளேன்.

இது குறித்த பதவி விலகல் கடிதத்தினை கடந்த 23-09-2023 அன்று பதிவுத் தபால் ஊடாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளேன் என்று தெரிவித்தார்.

அவர், தன்னுடைய பதவி விலகலை அறிவித்தபின்னர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert