pfizer :போலி பிரச்சாரங்களை நம்பாதீர்கள்!

கொரோனா நோய்க்கு (COVID 19) எதிரான தடுப்பூசிகளில் pfizer m RNA தடுப்பூசியானது உரிய முறையில் -60C தொடக்கம் -90 C பேணப்பட்டால் அதனுடைய ஆயுள் காலம் 9 மாதத்தில் இருந்து 12 மாதங்களுக்கு அதிகரிக்கப்படலாம் என்பதை உரிய ஆய்வுகளின் மூலமாக நிரூபிக்கப்பட்டு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA ) நிறுவனத்தாலும் உலக சுகாதார ஸ்தாபனத்தாலும் (WHO ) ஏற்றுக் கொள்ளப்பட்டு அமெரிக்கா முதலான உலகின் பல நாடுகளிலும் வழங்கப்பட்டு வருகிறது (ஆதாரம் : https://www.fda.gov/…/mcm…/expiration-dating-extension ) என தெரிவித்துள்ளார் முன்னணி சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன்.
இந்த தடுப்பூசியின் விலை 19.5 அமெரிக்க டாலர் அல்லது இலங்கை ரூபாய்களில் 7000 ஆகும். உலக சுகாதார ஸ்தாபனம் மிகுந்த சிரமத்தின் மத்தியில் கோடிக்கணக்கில் செலவழித்து கொரோனா நோயினால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பதற்காக இலங்கை போன்ற வறிய நாடுகளுக்கு இந்த தடுப்பூசியை இலவசமாக தருவித்து இருக்கிறது.
வடக்கில் குறிப்பாக வன்னி பகுதியில் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களின் வீதம் குறைவாக இருப்பதுடன் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் பலர் ஒரு தடவை கூட தடுப்பூசி ஏற்றிக் கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் நாட்டின் ஏனைய மாகாணங்களில் அறிவுறுத்தப்பட்டது போல் வடக்கிலும் ஆயுள் காலம் நீடிக்கப்பட்ட Pfizer m RNA தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. இது தொடர்பாக அனைத்து ஊடகங்களுக்கும் விபரங்கள் சுகாதார திணைக்களத்தினால் சில மாதங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டு இருந்தது.
உண்மை நிலை இவ்வாறு இருக்க பொறுப்பு வாய்ந்த மருத்துவர்களையோ, துறைசார் மருத்துவ நிபுணர்களையோ கலந்தாலோசிக்காது அல்லது ஏனைய அபிவிருத்தி அடைந்த நாடுகளில் என்ன நடக்கிறது என்பதைக் கூட ஆராயாது சில தமிழ் ஊடகங்கள் வேண்டுமென்றே ஏனைய மாகாணங்களில் நிராகரிக்கப்பட்ட காலாவதியான தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளுமாறு சிங்கள மருத்துவர் பாடசாலை மாணவர்களை பலவந்தப்படுத்துவதாக விஷமத்தனமான இனவாதப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
பாடசாலை மாணவர்கள் முன்னர் கொரோனா தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத நிலையில் அவர்களுக்கு இப்போது இலங்கையில் தடுப்பூசி வழங்கப்படுகிறது. கனடா உட்பட பல நாடுகளில் தற்போது 6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் தொடக்கம் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது.
ஊடகங்களின் விஷமப் பிரச்சாரங்களினால் பலர் வட பகுதியில் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதை நிராகரிக்கும் அபாயம் தோன்றி உள்ளதுடன் ஏற்கெனவே தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் தமக்கு ஏற்றப்பட்ட மருந்து தொடர்பாக மனக் கிலேசம் அடைந்துள்ளனர்.
2014-15 காலப்பகுதியில் நான் யாழ் மருத்துவ சங்க தலைவராக இருந்த காலத்தில் யாழ் ஊடக மையத்தில் உலக சுகாதார ஸ்தாபன அனுசரணையுடன் தற்கொலை செய்து கொண்டவர் தொடர்பான விடயங்களை வெளிப்படுத்தினால் அது மேலும் பலரை தற்கொலை செய்யத் தூண்டும் என்பதனால் அதை தவிர்க்க வேண்டும் என்று தற்கொலைகளை ஊடகங்களில் எவ்வாறு ஊடக ஒழுக்க நெறியுடன் பதிவு செய்ய வேண்டும் என்று பயிற்சி பட்டறை மூலம் அனைத்து ஊடகவியலாளருக்கும் விளக்கப்பட்டு கைநூலும் வழங்கப்பட்டது .
ஆனால் அது முடிந்து சில தினங்களுக்குள் தற்கொலை செய்த மன்னாரை சேர்ந்த ஒரு பாடசாலை மாணவனின் படத்தை வெளியிட்டு ஊடக ஒழுக்க நெறியை மீறி கேவலமாக சில தமிழ் இணையதளங்கள் நடந்து கொண்டன.
இந்தக் கேடு கெட்ட இணையத்தளங்களுடன் கடந்த காலங்களில் சமூகப் பொறுப்புடன் தரமான செய்திகளை வெளியிட்டு தமிழ் மக்களின் நன்மதிப்பை பெற்ற பத்திரிகையும் இணைந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார் முன்னணி சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன்.