Mai 17, 2024

வீதிகளில் மக்கள்: வீட்டு வைத்தியமே நல்லது!

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது எண்ணிக்கை அதிகரிப்பால் வீடுகளில் சிகிச்சைப் பெறும் முறையை கடைப்பிடிக்கும் கடைசி கட்டத்திற்கு இலங்கை அரசு வந்துள்ளது.

எனினும் அது வெற்றிகரமான பலன்களை வெளிக்காட்டுவதாக, குடும்ப வைத்திய விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜுன் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமான வீடுகளில் சிகிச்சைப் பெறும் முறையின் கீழ், தற்போது வரை 24,847 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாடு முழுவதும் 41,826 தொற்றாளர்கள் வீடுகளில் சிகிச்சைப் பெற்று வருவதுடன், இவ்வாறு வீடுகளில் சிகிச்சைப் பெறுபவர்கள் தொற்றாளர்களுக்கு மன அமைதி முக்கியம் என்பதை அவர்களுடன் தொலைபேசியில் உரையாடும் போது, இது உறுதிபடுத்தப்பட்டதென்றார்.

இந்த நோயின் தாக்கம் அதிகரிக்க மன அழுத்தமும் தாக்கம் செலுத்துவதாகவும் எனவே, கொரோனா தொற்றாளர்கள் குணமடைவதற்கு, மன ஆரோக்கியம் நல்ல நிலையில் இருப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில், வீதிகளில் அநாவசியமாக பலர் நடமாடி திரிந்த நிலையில், யாழ்ப்பாணப் பொலிஸார் நேற்றைய தினம் இரவு, யாழ்ப்பாணம் புறநகர் பகுதிகளில், திடீர் வீதிச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் போது, அநாவசியமாக வீதியில் நடமாடியோர் பலரை மறித்து சோதனைக்கு உட்படுத்தியதுடன், அவர்களின் விவரங்களை பதிந்த பின்னர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

இதேவேளை, அநாவசியமாக வீதியில் நடமாடியோர்களுக்கு எதிராக சட்ட நவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.