Mai 1, 2024

2 பிள்ளைகளின் தாய் வெட்டிக் கொலை – இளைஞர் கைது

நுவரெலியா – பூண்டுலோயா பழைய சீன் தோட்டத்தில் லயன் குடியிருப்பு ஒன்றிலிருந்து, கூரிய ஆயுதத்தில் தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் பழைய சீன் தோட்டத்தில் வசித்த இரு பிள்ளைகளின் தாயான பெருமாள் மாலா (47 வயது) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராரே கொலைக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் அடிப்படையில் அதே தோட்டத்தில் வசிக்கும் 27 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் சடலம் வீட்டின் சமயலறையில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கும் பொலிஸார், சடலம் மீட்கப்படும் போது துணிகளால் சுற்றப்பட்டிருந்தாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

சடலம் நாவலப்பிட்டி நீதவானின் மரண விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பான விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.