September 16, 2024

தலைவரின் வரலாற்று சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்.(04.08.1987)

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!

இன்று எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. திடீரென எமக்கு அதிர்ச்சியூட்டுவது போல, எமது சக்திக்கு அப்பாற்பட்டது போல, இந்தத் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.இதன் விளைவுகள் எமக்கு சாதகமாக அமையுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.திடீரென மிகவும் அவசரமாக, எமது மக்களையோ, எமது மக்களின் பிரதிநிதிகளாகிய எம்மையோ கலந்தாலோசிக்காமல், இந்தியாவும் இலங்கையும் செய்து கொண்ட ஒப்பந்தம் இப்பொழுது அவசரஅவசரமாக அமுலாக்கப்பட்டுவருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

நான் டெல்லி செல்லும்வரை இந்தஒப்பந்தம் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது, பாரதப்பிரதமர் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொல்லி என்னை டெல்லிக்கு அவசரமாக அழைத்துச் சென்றார்கள்.அங்கு சென்றதும் இந்த ஒப்பந்தம் எமக்குக் காண்பிக்கப்பட்டது. இந்த ஒப் பந்தத்தில் பல சிக்கல்கள் இருந்தன, பல கேள்விக்குறிகள் இருந்தன. இந்த ஒப்பந்தத்தால் எமது மக்களின் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படுமா என்பது பற்றி எமக்கு சந்தேகம் எழுந்தது. ஆகவே இந்த ஒப்பந்தத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இந்திய அரசுக்குத் தெட்டத்தெளிவாக விளக்கினோம்.

 ஆனால், நாம் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாது போனாலும் இந்த ஒப்பந்தத்தை அமுலாக்கியே தீருவோமென இந்திய அரசுகங்கணம் கட்டி நின்றது.

இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து நாம் ஆச்சரியப்படவில்லை.இந்த ஒப்பந்தம் தமிழர் பிரச்சினையை மட்டும்தொட்டுநிற்கவில்லை. இது பிரதானமாக இந்திய – இலங்கை உறவு பற்றியது.இந்திய வல்லாதிக்க வியூகத்தின் கீழ் இலங்கையைக் கட்டுப்படுத்தும் விதிகளும் இதில் அடங்கியிருக்கின்றன. இலங்கையில் அந்நிய நாசகார சக்திகள் காலூன்றாமல் தடுக்கவும் இது வழிவகுக்கிறது.ஆகவேதான் இந்திய அரசு இந்த ஒப்பந்தத்தைச் செய்து கொள்வதில் அதிக அக்கறை காட்டியது.ஆனால், அதே சமயம், ஈழத்தமிழரின் அரசியல் தலைவிதியை நிர்ணயிப்பதாகவும் இந்த ஒப்பந்தம் அமைகிறது.ஆகவேதான், எமது மக்களைக்கலந்தாலோசிக்காது,எமது கருத்துக்களைக் கேளாது இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதை நாம் கடுமையாக ஆட்சேபித்தோம்.ஆனால் நாம் ஆட்சேபித்ததில் அர்த்தமில்லை . எமது அரசியல் தலை விதியை எமது வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் வல்லரசு நிச்சயிக்க முடிவு செய்திருக்கும் பொழுது நாம் என்ன செய்வது?

இந்த ஒப்பந்தம் நேரடியாக எமது இயக்கத்தைப் பாதிக்கிறது; எமது அரசியல் இலட்சியத்தைப் பாதிக்கிறது; எமது போராட்ட வடிவத்தைப் பாதிக்கிறது; எமது ஆயுதப் போராட்டத்திற்கு ஆப்புவைப்பதாகவும் அமைகிறது. பதினைந்து வருடங்களாக, இரத்தம்சிந்தி, தியாகம் புரிந்து, சாதனைகள் ஈட்டி எத்தனையோ உயிர்ப்பலி கொடுத்து கட்டி எழுப்பப்பட்ட ஒரு போராட்ட வடிவம் ஒரு சில தினங்களில் கலைக்கப்படுவதென்றால் அதை நாம் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது. திடீரென காலஅவகாசமின்றி எமது போராளிகளின் ஒப்புதலின்றி, எமது மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமின்றி இந்த ஒப்பந்தம் எம்மை நிராயுதபாணிகளாக்குகிறது. ஆகவே, நாம் ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்தோம்.

இந்தச் சூழ்நிலையில் பாரதப்பிரதமர் ராஜீவ்காந்திஅவர்கள் என்னை அழைத்துப்பேசினார். அவரிடம் எமது பிரச்சினைகளைமனந்திறந்து பேசினேன்.சிங்கள இனவாத அரசில் எமக்குத் துளிகூடநம்பிக்கை இல்லையென்பதையும் இந்த ஒப்பந்தத்தை அவர்கள் நிறைவேற்றப் போவதில்லை என்பதையும் இந்தியப் பிரதமரிடம் எடுத்துரைத்தேன். எமது மக்களின் பாதுகாப்புப்பிரச்சினை பற்றியும்அதற்கானஉத்தரவாதங்கள் பற்றியும் அவரிடம் பேசினேன். பாரதப்பிரதமர் எமக்குசில வாக்குறுதிகளை அளித்தார். எமது மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்தார். பாரதப் பிரதமரின் நேர்மையில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது. அவரது உறுதிமொழிகளில் நம்பிக்கை இருக்கிறது. சிங்கள இன வாத அரசு மீண்டும் தமிழர் இன அழிப்பு நடவடிக்கையில் இறங்க இந்தியா அனுமதிக்காது என நாம் நம்புகிறோம். இந்த நம்பிக்கையில் தான் நாம் இந்திய சமாதானப்படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க முடிவு செய்தோம்.

 நாம் எமது மக்களின் பாதுகாப்பிற்காக எத்தனை அளப்பரிய தியாகங்களைப் புரிந்தோம் என்பதை நான் இங்கு விளக்கிக்கூறத் தேவையில்லை . எமது இலட்சியப் பற்றும், தியாக உணர்வும் எத்தன்மை வாய்ந்தது என்பதை எமது மக்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள். உங்களது பாதுகாப்பிற்காக, உங்களது விடுதலைக்காக, உங்களது விமோசனத்திற்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம்.நாம் இந்த ஆயுதங்களை ஒப்படைக்கும் கணத்திலிருந்து, எமது மக்களாகிய உங்களின் பாதுகாப்புப் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப் படைக்கிறோம்.ஈழத் தமிழரின் ஒரே பாதுகாப்பு சாதனமாக இருந்துவந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடத்திலிருந்து பெற்றுக் கொள்வதிலிருந்து மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறது.

ஆயுதக் கையளிப்பு என்பது இந்தப் பொறுப்பு மாற்றத்தைத்தான் குறிக்கிறது.நாம் ஆயுதங்களைக் கையளிக்காது போனால் இந்திய இராணுவத்துடன் மோதும் துர்ப்பாக்கிய சூழ் நிலை ஏற்படும்.இதை நாம் விரும்பவில்லை. இந்தியாவை நாம் நேசிக்கிறோம்.இந்திய மக்களை நாம் நேசிக்கிறோம். இந்திய வீரனுக்கு எதிராக நாம் ஆயுதங்களை நீட்டத் தயாராக இல்லை . எமது எதிரியிட மிருந்து எம்மைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்திய இராணுவ வீரர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.

 நாம் ஆயுதங்களை அவர்களிடம் கையளிப் பதிலிருந்து ஈழத் தமிழன் ஒவ்வொருவனதும் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் இந்திய அரசுதான் பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதை நான் இங்கு இடித்துக்கூற விரும்புகிறேன்.இந்தியாவின் இந்த முயற்சிக்கு நாம் ஒத்துழைப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. இந்தச்சந்தர்ப்பத்தை நாம் அவர்களுக்குவழங்குவோம். ஆனால் இந்த ஒப்பந்தத்தால் தமிழரின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுமென நான் நினைக்கவில்லை  சிங்கள இனவாத பூதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கி விடும் காலம் வெகுதூரத்தில் இல்லை .தமிழீழத் தனியரசே தமிழீழ மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கையுண்டு. தமிழீழ இலட்சியத்திற்காகவே நான் தொடர்ந்து போராடுவேன் என் பதையும் நான் இங்கு திட்டவட்டமாக உங்களுக்கு எடுத்துக்கூற விரும்புகிறேன். போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை. எமது இலட்சியம் வெற்றி பெறுவதானால் எமது மக்களாகிய உங்களின் ஏகோபித்த ஆதரவு என்றும் எமக்கு இருக்கவேண்டும்.

 தமிழீழ மக்களின் நலன் கருதி இடைக்கால அரசில் பங்குபற்ற அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்திற்கு ஏற்படலாம். ஆனால் நான் எந்தக் காலகட்டத்திலும் தேர்தலில் பங்கு பற்றப் போவதில்லை. முதலமைச்சர் பதவியையும் ஏற்கப்போவதில்லை. இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்லவிரும்புகிறேன்.

-தமிழீழத்தேசியத் தலைவர்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert