பொய்களுடனும் புனை கதைகளுடனும் ரணில்!
![](https://eelattamilan.stsstudio.com/wp-content/uploads/2024/06/suresh.jpg)
இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கனவுடன் பொய்களுடனும் புனை கதைகளுடனும் ரணிலின் உரை அமைந்திருந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் கருத்துத் தெரிவித்த அவர், “ஜனாதிபதி தனது உரையில் 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உவரி நிதி கிடைக்கவில்லை எனக் கூறுகிறார். 1977 தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை உள்நாட்டிலே இனப் பிரச்சினையினால் ஏற்பட்ட யுத்தத்திற்காக சுமார் 250 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளதை சர்வதேச ஆய்வாளர் ஒருவர் கூறியிருக்கிறார். அதனை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன்.
தற்போது இலங்கைக்கு 5500 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்துள்ளதாக கூறும் ரணில் விக்ரமசிங்க 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கியதையும் ஒத்துக் கொண்டிருக்கின்றார்.
16 தடவைகள் சர்வதேச நாணயத்திடம் வாங்கிய கடனில் அபிவிருத்தி வேலைப்பாடுகளில் தோல்வி அடைந்ததையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
மக்கள் வரிசையில் நின்ற யுகத்திற்கு தான் முடிவு கட்டியுள்ளதாக மார் தட்டும் ரணில் விக்ரமசிங்க மக்கள் தலைமீது கடன் சுமையை சுமத்தியுள்ளமையை அறியாதவர் போல் கருத்து வெளியிடுகிறார்.
ஐ.நா. கணக்கெடுப்பின் பிரகாரம் இலங்கையில் 60 வீதமானவர்கள் வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவர்கள் என புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 70 வீதமாக இருந்த பண வீக்கத்தை 9 வீதமாக குறைத்துள்ளேன் எனத் தெரிவிப்பது வேடிக்கையான விடயம்.
இலங்கையில் பண வீக்கம் குறைந்தால் பொருட்களின் விலை குறைய வேண்டும் ஆனால் மக்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியாத நிலையில் வீதிகளில் இறங்கி போராடுகிறார்கள்.
இலங்கை உலக நாடுகளிடம் வாங்கிய கடன் 97 பில்லியன் அமெரிக்க டொலர் எனக் கூறப்படும் நிலையில் அதனை 2028 தொடக்கம் 2043 ஆம் ஆண்டு வரை செலுத்துவதற்கான கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுதான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்த சாதனையா? கடனை கட்டும் கால நீடிப்பைக் கூட்டி மக்களின் தலையில் வரியை செலுத்தும் கைங்கரியத்தை ஜனாதிபதி செய்துள்ளார்.
மக்கள் மீது கடன் சுமையை சுமத்தி விட்டு தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படாவிட்டால் மக்கள் இருண்டயுகத்துக்குச் செல்ல நேரிடும் அல்லது மீண்டும் வரிசை யுகத்துக்கு செல்ல வேண்டுமென மிரட்டும் பேச்சுக்களாக அவரது உரை காணப்படுகிறது.
கடன் வாங்கும் நபராக ரணில் விக்ரமசிங்கவும் கடனை வட்டியுடன் செலுத்தும் நபர்களாக இந்த நாட்டு மக்களும் காணப்படுகிறார்கள் எனவும் சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.