ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னாயத்தம்!
![](https://eelattamilan.stsstudio.com/wp-content/uploads/2024/06/ELECTION-SRILANKA.jpg)
ஜனாதிபதி தேர்தலிற்கான காலக்கெடு தொடர்பில் ஒருபுறம் பேசப்பட மறும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பயன்படுத்தக்கூடிய அரச அதிகாரிகள் மற்றும் அரச வாகனங்களின் கணக்கெடுப்பை மேற்கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய அரசு அதிகாரிகள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்து ஆவணங்கள் பெறப்பட உள்ளது.
அதேவேளை, மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அதற்கான சிறப்பு படிவம் வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜுலை மாதம் பிற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் முழுமையாக தேர்தல்கள் ஆணைக்குழு வசமாக உள்ள நிலையில் முதல்கட்ட நடவடிக்கையாக ஆணைக்குழு இந்த நகர்வில் ஈடுபட்டுள்ளது.
ஜுலை முதல் வாரத்தில் இருந்து தேர்தல் பிரசாரங்களை ஆரம்பிக்க நாட்டின் பிரதான கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. ஆளுங்கட்சியை தவிர ஏனைய இரண்டு பிரதான கட்சிகளான தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன தமது பிரசாரத்துக்கான அட்டவணைகளைகூட தயாரித்துவிட்டன.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் இந்த நகர்வு அனைத்துக் கட்சிகளையும் விரைவில் தேர்தலுக்கான பிரசாரங்களை ஆரம்பிப்பதற்கான சமிக்ஞையை வழங்கியுள்ளது.