April 26, 2024

பாராட்டப்பட வேண்டியவர் மருத்துவர் சி.முகுந்தன் அவர்கள்

கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தாயாருக்கு பிறந்த குழந்தைக்கு இருதய சத்திர சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு மத்தியில் தமது உயிர் ஆபத்துக்களையும் பொருட்படுத்தாது, பிறந்து இரண்டு நாட்களேயான சிசுவொன்றின் உயிரை காப்பாற்ற இலங்கை வைத்தியர்கள் முன்வந்த சம்பவமொன்று கொழும்பில் அண்மையில் பதிவாகியுள்ளது.
உலகமே எதிர்நோக்கியுள்ள மிக கொடூரமான வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில், கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சிசுவொன்றிற்கு வைத்தியர்கள் இருதய சத்திர சிகிச்சையை நடத்தி, குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.
அவிசாவளை பகுதியைச் சேர்ந்த கர்ப்பணித் தாய் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரட்டை குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
இந்த குழந்தையை ஈன்றெடுத்த தாய்க்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த இரட்டை குழந்தைகள் மற்றும் தாய் ஆகியோர் உடனடியாக முல்லேரியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பிறந்த குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இரத்தத்தில் உரிய வகையில் ஒக்சிஜன் இருக்கவில்லை என சிறுவர்கள் தொடர்பிலான விசேட வைத்திய நிபுணர் தெரிவித்த நிலையில், குறித்த சிசு , குழந்தைகள் தொடர்பிலான பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் குழந்தைக்கு பிறப்பிலேயே இருதய நோய் உள்ளமையும் அது உடனடியாக சத்திரசிகிச்சை மூலம் சீர் செய்யப்பட வேண்டியதென்றும் உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, குறித்த குழந்தை பொரள்ளை ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
பொரள்ளை ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில், விசேட இருதய சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் சிதம்பரநாதன் முகுந்தன் தலைமையிலான குழுவினால் அன்றிரவே ஏழு மணித்தியாலங்கள் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்த குழந்தை ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுஇ தற்போது கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
எவ்வாறாயினும், குழந்தையின் தொற்றுக்குரிய பி.சி.ஆர் நிலை அறியப்படாத நிலையில் தமக்கு ஏற்படக்கூடிய ஆபத்தையும் பொருட்படுத்தாது, குழந்தைக்கு மிக வெற்றிகரமாக சத்திர சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.
விசேட இருதய சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் சிதம்பரநாதன் முகுந்தன் குழுவினரது இச்சேவை போற்றப்படக்கூடியது.