Oktober 18, 2024

ஸ்ரீலங்கா மக்களுக்கு கொரோனாவை பரிசளித்த கோட்டாபய அரசு!

இந்த அரசாங்கம் ஆட்சி ஏற்று எட்டு மாதங்களில் பரிசாக கொரோனாவையே தந்திருக்கின்றது என முன்னாள் அமைச்சர் ரவி கருணநாயக்கா தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாடிவீடு விடுதியில் இன்று ஆதரவாளர்களை சந்தித்து கருத்துரைக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

ஒரு தீர்மானம் மிக்க தேர்தலாக இதனை பார்க்கின்றோம். சாதாரணமாக தேர்தல் காலத்தில் கருத்து கணிப்பு செய்வோம், அந்த கருத்துக் கணிப்பின்படி ஜக்கிய தேசிய கட்சிக்கு மீண்டும் எழுச்சி ஆதரவு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி என்பது ஐக்கியமும் தேசியமும் இருப்பதன் காரணத்தினால் இந்த எழுச்சி ஏற்பட்டுள்ளது.

வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் டி.எஸ்.சேனநாயக்க, டட்லி சேனாயக்க, ஜே.ஆர். ஜெயவர்த்தன, பிரேமதாஸ, டி.வி.விஜயதுங்க, ரணில் விக்ரமசிங்க காலம் வரை கட்சி பயணிக்கின்றது. தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் ஆகிய மூன்று இனமும் ஒற்றுமையாக வழிநடத்தக் கூடிய கட்சி தான் வெற்றிக்குரிய காரணம்.

எங்களுடைய எண்ணங்களும் செயற்பாடுகளும் ஒரேவிதமாகத்தான் அமையும். கொழும்பு, அம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை என வெவ்வேறு பாரக்கவில்லை. இலங்கையில் ஒரேமுகமாகத் தான் எமது செயற்பாடு இருக்கின்றன.

தற்போது பௌத்தர்கள், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் எல்லோரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டியுள்ளது. அந்த வெற்றிக்கு ஒரே ஒருவழி ஐக்கிய தேசிய கட்சி தான்.

புதிய ஜனாதிபதி அரசை பெறுப்பேற்று 8 மாத காலமாக நாங்கள் எதிர்க் கட்சியிலுள்ளோம். இந்த 8 மாதத்தில் ஜீவணோபாய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளது. இவர்களுக்குத் தெரியாது எவ்வாறு வழிநடாத்துவது என நாங்கள் ஆட்சில் இருந்தபோது பால்மாவின் விலை 320 ரூபா தற்போது 420 ரூபா, சீனி 80 ரூபாவாக இருந்து தற்போது 155 ரூபா, ரின் மீன் 140 ரூபாவாக இருந்தது தற்போது 240 ரூபாவாக உயர்ந்துள்ளது.

அது மட்டுமல்ல உலகசந்தையில் எரிபொருளுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது ஆனால் இலங்கையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அன்று 2 ஆயிரத்து 300 ரூபாவாக இருந்த எரிவாயு எங்களுடைய ஆட்சியில் ஆயிரத்து 350 ஆக குறைக்கப்பட்டது இப்போது 1650 ரூபா ஆனால் இப்போது எங்கள் ஆட்சியிருந்தால் 950 ரூபாவுக்கு வழங்கிருப்போம்.

அதுமாத்திரமல்ல இளைஞர் யுவதிகளின் வேலை வாய்ப்பும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது மிகவும் பின்தங்கிய பொருளாதாரம் இந்த அரசாங்கம் தந்திருக்கின்றது. ஒரே ஒரு பரிசாக கொரோனா இதற்கு ஒரு தீர்வு இல்லை. வருகின்ற 6ஆம் திகதி இந்த நாட்டிலே எங்களுடைய ஆட்சியை ஏற்படுத்தி சிறந்த நிபுணத்துவமான அரசாங்கத்தை முன்னெடுப்பதே நோக்கம்.

எங்களுடைய பொருளாதாரத்தை எடுத்துக் கொண்டு எங்களுடைய கட்சியின் வளங்களை பெற்றுக் கொண்டு முன்னேற்றமடைந்தவர்கள் இன்று எங்களுக்கு எதிராக வெளியே சென்று போர்கொடி செய்கின்றனர் அவர்கள் அவர்களுடைய சுய திட்டத்தை உயர்த்துவதற்ககாவே தவிர மக்களுடைய திட்டத்திற்காக அல்ல.

யானையில் கொசு ஒன்று வந்து இருப்பதால் எங்களுக்கு பிரச்சினையில்லை. எதிர்காலத்தில் நாங்கள் முன்னேறுவோம். இது ஒரு இலகுவான தேர்தல் அல்ல இது ஒரு பிரிவினைவாதத்திற்கான தேர்தலுமல்ல. இது உங்களுடைய எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கான தேர்தல் என அவர் தெரிவித்துள்ளார்.