Mai 10, 2024

சமூக தொற்று:யாழ்.பல்கலைக்கழகமா காரணம்?

யாழ்ப்பாணத்தை கொரேர்னா மீண்டும் முடக்கியுள்ள நிலையில் தடைகளை தாண்டி பட்டமளிப்பு விழாவை முன்னெடுத்த யாழ்.பல்கலைக்கழகம் மீது மீண்டும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வேறெங்கும் இல்லாதவாறு பட்டமளிப்பு விழாவை துணைவேந்தர் நடத்த முற்பட்ட நிலையில் சுகாதார திணைக்களம் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தது.எனினும் தனது அரசியல் செல்வாக்கால் பட்டமளிப்பு விழாவை துணைவேந்தர் நடத்தி முடிந்துள்ள நிலையில் யாழ்.குடாநாட்டில் சமூக தொற்றாக  பரிணமித்திருக்கின்றமை அம்பலமாகியுள்ளது.

இதனிடையே யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு கிருமி நாசினி விசுறும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்த நிலையில் நேற்று மாவட்ட கொரோனா தடுப்புச் செயலணியின் அவசர கூட்டம் இடம்பெற்றது.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தின் போது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தன.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கில் யாழ். நகர்ப் பகுதியில் அதிகளவான பொலிஸார், இராணுவத்தினர், சுகாதாரத் துறையினர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இன்று களமிறக்கப்பட்டனர்.