März 28, 2025

அமெரிக்க அதிபர் பதவியேற்ப்பை அலங்கரிக்கும் தமிழ் கலாச்சார கோலங்கள்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன் வரும் 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.இதையடுத்து அவர் வெள்ளை மாளிகையில் குடியேற உள்ள நிலையில் தற்போதைய அதிபர் ட்ரம்ப் அங்கிருந்து வெளியேற உள்ளார்.

இதற்கிடையில் பைடன் பதவியேற்பு விழாவில் அசம்பாவிதங்கள் நிகழ்வதை தடுக்கும் பொருட்டு தலைநகர் வாஷிங்டனிலும் குறிப்பாக நாடாளுமன்ற கட்டடத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் துணை அதிபராக வரும் 20 ஆம் தேதி கமலா ஹாரிஸ் பதவியேற்க இருக்கும் நிலையில் பதவியேற்பு விழாவை மேலும் அழகாக்க தமிழர் பாரம்பரியமான கோலத்திற்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜோபைடன் மற்றும் கமலா ஹாரீஸை கோலமிட்டு வரவேற்க திட்டமிட்ட அமெரிக்கா வாழ் இந்தியர்கள் இதற்காக ஆயிரத்து 800 பேரிடம் இருந்து கோலங்களை பெற்றுள்ளது.

டைல்ஸ்களில் இந்த கோலங்கள் ஒட்டப்பட்டு நாடாளுமன்ற கட்டடம் முன்பு வைக்கப்பட்டுள்ளது. கோலங்கள் நேர்மறை எண்ணத்தை தருவதோடு புதிய தொடக்கத்தை மேலும் அழகாக்கும் என்பதால் இந்த முயற்சியை மேற்கொண்டதாக கூறுகின்றனர் அமெரிக்கா வாழ் இந்தியர்கள்.

அமெரிக்கா துணை அதிபராக பதவி ஏற்க இருக்கும் கமலா ஹாரிஸின் தாய், தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.