Mai 10, 2024

கொரோனா தொற்று காரணமாக 78 பேர் வீடுகளில் உயிரிழந்தனர்..!!

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் கடந்த 6 மாதங்களில் கொரோனா தொற்று காரணமாக 78 பேர் வீடுகளில் உயிரிழந்துள்ளதாக கொழும்பு சட்டவைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் தெரிவித்துள்ளார்.

வீடுகள் அல்லது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது 383 பேர் உயிரிழந்துள்ளனர். மரணத்திற்கு பின்னர் நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் இவர்களில் 78 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர்களுக்கு PCR பரிசோதனை நடத்தும் நடவடிக்கைகள் கடந்த ஜூன் மாதம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த பரிசோதனைகளில் கொரோனா தொற்றால் உயிரிழந்த நபர் ஒருவர் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டார். அன்றைய தினம் முதல் டிசம்பர் 27 ஆம் திகதி வரையான காலத்தில் இந்த 78 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் வீடுகளில் உயிரிழந்த நபர்களில் 95 வீதமானவர்கள் பல்வேறு தொற்று நோய் அல்லாத நோய்களால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் எனவும் சட்ட வைத்திய அதிகாரி கூறியுள்ளார்.