Mai 2, 2024

செல்வம் அடைக்கலநாதன் ஜனாதிபதியிடம் கோரிக்கை

கொரோனா அச்சம் காரணமாக சிறுகுற்றக் கைதிகள் விடுவிக்கப்பட்டுவரும் நிலையில் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளான அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார் .

இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று ( திங்கட்கிழமை ) ஜனாதிபதிக்கு அவசர கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் .  குறித்த கடிதத்தில் , “ நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தின் போது செல் துகல்களை உடலில் சுமந்தவாறு தற்போது பல அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர் .

அத்துடன் தீர்ப்பு வழங்கப்பட்ட அரசியல் கைதிகளும் உள்ளனர் . இவர்கள் தற்போது மருத்துவ வசதிகள் இல்லாமல் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் . நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக சிறைச்சாலையில் உள்ள கைதிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர் . இந்நிலையில் குறித்த அரசியல் கைதிகளையும் முன்னுரிமை அடிப்படையில் அரசாங்கம் விடுதலை செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கடிதத்தில் கோரியுள்ளார் .