Mai 17, 2024

யாழ்ப்பாணம் திங்கள் முதல் வழமைக்கு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதி திங்கள்கிழமை முதல் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக   யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்  தெரிவித்துள்ளார்.மேலும் யாழ்ப்பாண மாவட்ட தற்போதைய நிலைமை தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் யாழ். மாவட்டத்தில் கடந்த ஒக்ரோபர் மாதத்துக்குப் பின்னர் நேற்று மாலை வரையான நிலைவரப்படி 1116 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 12 மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், இன்னும் 600 பேரளவில் வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவருவதாகவும் அரச அதிபர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும், கொரோனா தொற்று அச்சநிலை காரணமாக 1784 குடும்பங்களைச் சேர்ந்த 5042 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் சற்றுக் குறைந்துவரும் நிலையில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன எனக் குறிப்பிட்டுள்ள அரசாங்க அதிபர் அவர்கள், யாழ். மாவட்டத்தை இயல்பான நிலையில் வைத்திருக்க மக்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து சுகாதார தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.