Mai 8, 2024

மீண்டும் திருமதி இலங்கை அழகி கிரீடத்தை தன்வசமாக்கினார் புஸ்பிகா

மீண்டும் திருமதி  இலங்கை அழகி கிரீடத்தை தன்வசமாக்கினார் புஸ்பிகா

இலங்கையில் நடத்தப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான திருமதி  இலங்கை அழகிப் போட்டியில், புஸ்பிகா டி சில்வாவை வெற்றியாளர் என கூறி மீளவும் குறித்த கிரீடத்தை அவரிடமே கையளிக்க ஏற்பாட்டுக் குழு தீர்மானித்துள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு, 2021 ஆம் ஆண்டுக்கான  திருமதி இலங்கை போட்டி நடத்தப்பட்டது.

இதன்போது குறித்த போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கிய கிரீடத்தை மீள அகற்றி இரண்டாவது வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பெண்ணுக்கு அணிந்து, அவரே, திருமதி இலங்கையின் 2021ஆம் ஆண்டுக்கான அழகியாக தெரிவு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

குறித்த பெண் விவாகரத்து செய்யப்பட்டவர் என்ற காரணத்தினாலேயே இவ்வாறு  குறித்த பட்டமும் கிரீடமும் மீளப் பெறப்பட்டதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்திருந்தது.

இந்த சம்பவத்தினால் அந்நிகழ்வில் சிறிது பதற்றமான நிலைமை காணப்பட்டிருந்தது.

இதேவேளை புஷ்பிகா டி சில்வா, உச்சந் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளமை காரணமாக வைத்தியசாலையில் இன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

குறித்த சம்பவத்திற்குப் பின்னர், அவர் மன ரீதியாகவும் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் புஷ்பிகா தனது கணவனை விவாகரத்து செய்யவில்லை என்றும், ஜூரி, அவர் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும்  அவரது உதவியாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் புஷ்பிகா டி சில்வா,  இவ்விடயம் தொடர்பாக முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே ஏற்பாட்டுக்குழு, புஸ்பிகாவுக்கு இந்த பட்டத்தை மீள வழங்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் புஸ்பிகா, விவகாரத்தானவர் என்பதனை நிரூபிப்பதற்கு எவ்வித எழுத்து மூல ஆவணங்களும் முன்வைக்கப்படாதமையின் காரணத்தினால், அவருக்கு கிரீடத்தை மீள வழங்குவதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.