April 19, 2024

கால் நூற்றாண்டுக்கும் மேலான கண்ணீர்ப்போராட்டத்திற்கும், சட்டப்போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி! – சீமான் நெகிழ்ச்சி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இராஜீவ் காந்தி வழக்கில் சிக்குண்டு, 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைக்கொட்டடியில் வாடி வரும் ஆறு தமிழர்களையும் விடுவித்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உலகெங்கும் வாழும் தமிழர்களை உள்ளம் களிப்படையச் செய்திருக்கிறது. ஆருயிர் இளவல் பேரறிவாளனது முன்விடுதலையை அடியொற்றி, அதனடிப்படையில் வழங்கப்பட்டிருக்கும் வரலாற்றுச்சிறப்புமிக்க இத்தீர்ப்பு வரவேற்றுக்கொண்டாடத்தக்கது. ஆறுபேரின் விடுதலையை மட்டுமல்லாது, மாநில அமைச்சரவையின் இறையாண்மையையும், மாநிலத்தின் தன்னுரிமையையும் நிலைநாட்டியிருக்கிறது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. இத்தகையத் தீர்ப்பை வழங்கி நம்பிக்கை வார்த்த நீதியரசர்கள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு நன்றியையும், வணக்கத்தையும் செலுத்துகிறேன்

கால் நூற்றாண்டுக்கும் மேலான கண்ணீர்ப்போராட்டத்திற்கும், சட்டப்போராட்டத்திற்கும் பிறகு, கிடைத்திருக்கிற இவ்வெற்றியை அடைய பாடுபட்ட அத்தனைப்பேருக்கும் தமிழினம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.

இதற்காக உழைத்திட்ட தலைவர் பெருமக்கள்

· உலகத்தமிழர் பேரவையின் தலைவர் போற்றுதற்குரிய ஐயா பழ.நெடுமாறன் அவர்களுக்கும்,

· மதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் வைகோ அவர்களுக்கும்,

· திராவிடர் கழகத் தலைவர் ஐயா கி.வீரமணி அவர்களுக்கும்,

· பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ஐயா ச. இராமதாசு அவர்களுக்கும்,

· திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் அண்ணன் கொளத்தூர் மணி அவர்களுக்கும்

· தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் அண்ணன் கு.ராமகிருட்டிணன் அவர்களுக்கும்,

· விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களுக்கும்,

· தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கும்,

· தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் ஐயா தியாகு அவர்களுக்கும்.

· விடுதலைக்காகத் துணைநின்ற முன்னாள் நீதியரசர்கள் மதிப்பிற்குரிய ஐயா கிருஷ்ணய்யர் அவர்களுக்கும், ஐயா கே.டி.தாமஸ் அவர்களுக்கும்,

· மூவர் தூக்கு ரத்து செய்யப்பட முதல் தீர்மானம் நிறைவேற்றிய மறைந்த முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கும்,

· 161வது சட்டப்பிரிவின்படி தீர்மானம் இயற்றிய கடந்த அதிமுக அரசிற்கும்,

· இந்த விடுதலை வழக்கின் சட்டப் போராட்டத்தில் துணைநின்ற மாண்புமிகு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கும்,h

· விடுதலைக்காகத் தொடர்ந்து குரலெழுப்பிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் ஆருயிர் இரத்தம் வேல்முருகன் அவர்களுக்கும்,

· கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனர் உ.தனியரசு அவர்களுக்கும்,

· முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் அன்புத்தம்பி கருணாஸ் அவர்களுக்கும்,

· மனிதநேய சனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் அன்புத்தம்பி தமிமுன் அன்சாரி அவர்களுக்கும்,

· காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் எழுவர் விடுதலைக்காக தொடர்ந்து பேசிய ஐயா திருச்சி வேலுச்சாமி அவர்களுக்கும்

· எழுவர் விடுதலை குறித்து தொடர்ந்து புத்தகங்கள் எழுதி போராட்டத்திற்கு துணைநின்ற ஊடகவியலாளர் அன்பிற்கினிய உடன்பிறந்தான் பா.ஏகலைவன் அவர்களுக்கும்,

· மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தம்பி திருமுருகன் காந்தி அவர்களுக்கும்,

· தமிழ்த்தேசத் தன்னுரிமைக் கட்சித் தலைவர் அண்ணன் அ. வியனரசு அவர்களுக்கும்,

· ஆதித்தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் அண்ணன் அ.வினோத் அவர்களுக்கும்,

· தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் தம்பி சோழன் மு.களஞ்சியம் அவர்களுக்கும்,

· மருது மக்கள் இயக்கத்தின் தலைவர் தம்பி செ.முத்துப்பாண்டி அவர்களுக்கும்,

· வன வேங்கைகள் கட்சித் தலைவர் தம்பி பொ.மு.இரணியன் அவர்களுக்கும்,

தொடர்ந்து போராடிய தோழமை இயக்கங்களுக்கும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கும், தமிழின உணர்வாளர்களுக்கும், மனிதஉரிமை ஆர்வலர்களுக்கும், சமூகச்செயற்பாட்டாளர்களுக்கும் எனது உளப்பூர்வமான நன்றியையும், பெரும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் சட்டப்போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திமுடித்த வழக்கறிஞர் பெருந்தகைகள் மனித உரிமை போராளி ஐயா யுக் மோகித் சவுத்ரி அவர்களுக்கும், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் அவர்களுக்கும், தமிழக அரசின் வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி அவர்களுக்கும், சட்டத்தரணி மூத்தவர் தடா சந்திரசேகரன் அவர்களுக்கும், ஆருயிர் இளவல் பிரபு இராமசுப்பிரமணியன் அவர்களுக்கும், அன்புத்தம்பி பாரிவேந்தன் அவர்களுக்கும், வழக்கறிஞர் உதவியாளர் தம்பி காட்டுநெமிலி பாக்கியராஜ் அவர்களுக்கும், இளம் வழக்கறிஞர்கள் பாரதி மோகன், அழகுராஜபாரதி, பிரியா, மற்றும் சபரி பாலபாண்டியன் அவர்களுக்கும், மற்றும் எழுவர் விடுதலையில் பங்காற்றிய வழக்கறிஞர் புகழேந்தி உள்ளிட்ட அனைத்து வழக்கறிஞர்களுக்கும் எனது உளப்பூர்வமான நன்றியையும், பெரும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

31 ஆண்டுகாலமாக தமிழக வீதியெங்கும் நடையாய் நடந்து, தனது வாழ்நாளையே முழுவதுமாக இதற்காய் அர்ப்பணித்து, எழுவர் விடுதலைக்காக நாளும் உழைத்து, தனது மகனுக்கு மட்டுமல்லாது மீதமிருக்கும் ஆறு பேருக்குமான விடுதலையையும் சாத்தியப்படுத்த துணைநின்ற வீரத்தாய் அற்புதம் அம்மாள் அவர்களை எண்ணிப் பெருமிதமும், பூரிப்பும் கொள்கிறேன்! இத்தருணத்தில், தனது மூன்று அண்ணன்களின் உயிர் காக்க தனது உயிரையே கொடையாகத் தந்த ஈகி வீரத்தமிழச்சி தங்கை செங்கொடி அவர்களுக்கு எனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.

ஆறு பேரும் 32 ஆண்டுகள் கழித்து விடுதலை பெற்றிருக்கிற இத்தருணத்தில், இதே வழக்கில் முன்னதாக விடுதலை அடைந்தவர்களுக்கு வழங்கியதை போல, இவர்களின் விருப்பத்திற்கேற்ப வாழ வழிவகை செய்யுமாறு தமிழ்நாடு அரசை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert