März 29, 2024

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் 19 அம்சங்கள் கொண்ட தீர்மானம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் இலங்கை தொடர்பான முக்கிய குழு, இலங்கை தொடர்பில் 19 அம்ச தீர்மானத்தை முன்வைத்துள்ளது.

இந்த வரைவுத் தீர்மானம் ஐக்கிய இராச்சியத்தின் தலைமையில் அமெரிக்கா, வட அயர்லாந்து, மொண்டினீக்ரோ, வடக்கு மெசிடோனியா, அல்பேனியா, அவுஸ்திரேலியா, ஒஸ்திரியா,பெல்ஜியம், பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, பல்கேரியா, கனடா, குரோஷியா, சைப்ரஸ், செக்கியா, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, ஜெர்மனி, கிரீஸ், ஐஸ்லாந்து, அயர்லாந்து, இத்தாலி, லத்துவியா, லிச்சென்ஸ்டீன், லிதுவேனியா, லக்சம்பர்க், மலாவி, மொல்டாவா, நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, போர்த்துக்கல், ருமேனியா, ஸ்லோவேக்கியா, ஸ்லோவேனியா, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் அனுசரணையை பெற்றுள்ளது.

இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் செயற்பாடுகளை பாராட்டி இந்த வரைவு தீர்மானம், 19 விடயங்களை உள்ளடக்கியுள்ளது.

1. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் சமர்ப்பித்த வாய்மொழிப் புதுப்பிப்பு மற்றும் அதன் தற்போதைய அமர்வில் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கை ஆகியவற்றை வரவேற்கிறது.

2.உயர் ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் மனித உரிமைகள் பேரவையின் சிறப்பு நடைமுறைகளுடன் இலங்கை அரசாங்கத்தின் ஈடுபாட்டை வரவேற்கிறது, அத்தகைய ஈடுபாடு மற்றும் உரையாடலைத் தொடர ஊக்குவிப்பதுடன், இலங்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறது.

3.உணவுப் பாதுகாப்பின்மை, எரிபொருளில் கடுமையான தட்டுப்பாடு, அத்தியாவசிய மருந்துப் பற்றாக்குறை மற்றும் வீட்டு வருமானம் குறைப்பு போன்றவற்றின் விளைவாக பொருளாதார நெருக்கடியின் மனித உரிமைகள் தாக்கம் பற்றிய கவலையை வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில் தினசரி ஊதியம் பெறுபவர்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் விசேட தேவை உடைய நபர்கள் உட்பட, மிகவும் பின்தங்கியவர்களின் உரிமைகளை மேம்படுத்தி பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

4. 2022, ஏப்ரலில் இருந்து மனித உரிமைகள் முன்னேற்றங்கள், அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் கைதுகள், அத்துடன் அரசாங்க ஆதரவாளர்களுக்கு எதிரான வன்முறை, இதன் விளைவாக மரணங்கள், காயங்கள், அழிவு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு சேதம் விளைவித்தல், மற்றும் அனைத்து தாக்குதல்களிலும் சுயாதீன விசாரணைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதுடன், பொறுப்பானவர்கள் கருத்திற்கொள்ள வேண்டும் என்று கோருகிறது.

5. சிவில் அரசாங்க செயல்பாடுகளை இராணுவமயமாக்கலில் இருந்து பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் பொறுப்பான நீதித்துறை மற்றும் முக்கிய நிறுவனங்களின் சுதந்திரத்தை நிவர்த்தி செய்வது, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் குறைகள், கோரிக்கைகள் நீடித்த உள் இடப்பெயர்ச்சி, நில தகராறுகள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் மற்றும் நினைவேந்தல் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது மேற்கொள்ளப்படும், கண்காணிப்பு, அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல் மற்றும் பாலியல், பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர்த்துப் போராடுவதற்கு ஊக்கமளிக்கிறது.

6. தமிழீழ விடுதலைப் புலிகளின் துஷ்பிரயோகங்கள் உட்பட அனைத்து தரப்பினராலும் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு விரிவான பொறுப்புக்கூறல் செயல்முறையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.

7.சுயாதீனமான, பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான உள்நாட்டுப் பொறிமுறைகளின் தொடர்ச்சியான தவிர்ப்பை அறிக்கை குறிப்பிடுகிறது, மேலும் மனித உரிமைகளின் பாரதூரமான மீறல்களுக்கான விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

8. பொறுப்புக்கூறலை மேம்படுத்தும் நோக்கில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள், துஸ்பிரயோகங்கள் தொடர்புடைய குற்றங்களின் ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் பகுப்பாய்வு செய்வதன் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் கடுமையான மீறல்களுக்கு உறுப்பு நாடுகளில், தகுதியான அதிகார வரம்புடன் ஒருங்கிணைக்கும் திறனை விரிவுபடுத்தவும் வலுப்படுத்தவும் உயர்ஸ்தானிகர் முடிவு செய்துள்ளார்

9. அனைத்து சமூகங்கள் மற்றும் தலைமுறைகளை உள்ளடக்கிய இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டவர்களுடன் இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்பை அறிக்கை வலியுறுத்துகிறது. மேலும் பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களின் பங்குதாரர்களுடன் பரந்த அடிப்படையிலான ஆலோசனைச் செயல்பாட்டில் மேலும் ஈடுபடவும், அதற்கான தீர்வுகளை வழங்கவும் அர்த்தமுள்ள நல்லிணக்கம், அரசியல் அதிகாரப் பகிர்வு, மேம்பட்ட மனித உரிமைகள் மற்றும் நிலையான சமாதானத்தையும் தேட இலங்கை அரசாங்கத்தை ஊக்குவிக்கிறது.

10. அனைத்து மத சமூகங்களும் தங்கள் மதத்தை வெளிப்படுத்தும் திறனை ஊக்குவிப்பதன் மூலம் மத சுதந்திரம் அல்லது நம்பிக்கை மற்றும் பன்மைத்துவத்தை வளர்க்க இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகிறது, மேலும் சமூகங்கள் மத்தியில் வெளிப்படையாகவும் சமமான நிலையிலும் பங்களிப்பை கோருகிறது.

11. முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஓரங்கட்டப்படுதல் மற்றும் அவர்களுக்கு எதிரான பாகுபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை தீர்மானம் வலியுறுத்துகிறது.

12. மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்கள் தொடர்பான அனைத்து குற்றச் செயல்களுக்கும், உடனடி, முழுமையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணையை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளின் முழு பங்கேற்புடன் உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு இந்த தீர்மானம் அழைப்பு விடுக்கிறது.

13. பொது மற்றும் முன்னாள் அரச அதிகாரிகள் செய்த ஊழல்கள் உட்பட, ஊழல்களை விசாரிப்பது மற்றும் உத்தரவாதமளிக்கும் இடத்தில், வழக்குத் தொடுப்பது உட்பட, தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறது

14.காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகியவற்றின் பயனுள்ள மற்றும் சுயாதீனமான செயல்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. அதேவேளையில், பலவந்தமாக காணாமல் ஆக்ககப்பட்டோர் தொடர்பான பல வழக்குகளைத் தீர்ப்பது உட்பட, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பிற பங்குதாரர்களால் எதிர்பார்க்கப்படும் உறுதியான முடிவுகள் இன்னும் எட்டப்படவில்லை என்பதைக் குறிப்பிடுகிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அவர்களின் தலைவிதி மற்றும் இருப்பிடம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பயனுள்ள மற்றும் சுயாதீனமான செயற்பாட்டின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள முடியும். இந்த செயற்பாட்டை தீர்மானம் வலியுறுத்துகிறது.

15. மனித உரிமை பாதுகாவலர்கள் உட்பட சிவில் சமூக செயற்பாட்டாளர்களைப் பாதுகாக்க, அவர்களுக்கு எந்தவொரு தாக்குதல்களையும் விசாரிக்கவும், சிவில் சமூகம் தடைகள், கண்காணிப்பு, பாதுகாப்பின்மை மற்றும் பழிவாங்கும் அச்சுறுத்தல் இல்லாமல் செயல்படக்கூடிய பாதுகாப்பான மற்றும் செயல்படுத்தும் சூழலை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு அது அழைப்பு விடுக்கிறது.

16. கடந்த 2022, மாரச்சில் இருந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் தடுப்புக்காவல்கள் தொடர்கின்றன, மேலும் பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தை தீர்மானம் வலியுறுத்துகிறது.

இவ்வாறு தயாரிக்கப்படும் புதிய சட்டம் சர்வதேச நியமங்களுககு ஏற்ப முழுமையாக இணங்குவதை உறுதி செய்யவேண்டும் என்று தீர்மானம் பரிந்துரைத்துள்ளது.

17. மனித உரிமைகள் பேரவையின் விசேட நடைமுறைகளுடன் இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஈடுபாட்டைப் பாராட்டுவதுடன், அவர்களிடமிருந்து நிலுவையில் உள்ள கோரிக்கைகளுக்கு முறையாகப் பதிலளிப்பது உட்பட, அந்த ஒத்துழைப்பைத் தொடர அரசாங்கத்தை ஊக்குவிக்கிறது.

18. இதுவரை குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை இலங்கை அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து இணக்கத்துடன் வழங்குவதற்கு தொடர்புடைய சிறப்பு நடைமுறை ஆணை வைத்திருப்பவர்களை உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஊக்குவிக்கிறது.

19. நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் மற்றும் மனித உரிமைகள் மீதான பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழலின் தாக்கம் உட்பட இலங்கையின் மனித உரிமைகளின் நிலைமையை கண்காணித்து அறிக்கையிடுவதை மேம்படுத்துமாறு உயர் ஸ்தானிகர் அலுவலகத்தை தீர்மானம் கோருகிறது.

மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது மற்றும்  55 ஆவது அமர்வுகளில் ஒரு வாய்வழி புதுப்பிப்பு மற்றும் அதன் 54 ஆவது அமர்வில் எழுத்துப்பூர்வ புதுப்பிப்பு மற்றும் அதன் 57 ஆவது அமர்வில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான கூடுதல் விருப்பங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான அறிக்கை மற்றும் ஊடாடும் உரையாடலையும், முக்கிய நாடுகளின் தீர்மானம் கோரியுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert