April 19, 2024

யாழிலிருந்து கொழும்பு மகசீன் சிறைச்சாலை நோக்கி கைதிகளின் உறவுகள் பயணம்

ஐ. நா. அமர்வு எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற  தமிழ் அரசியல் கைதிகளை சந்திப்பதற்காக அரசியல் கைதிகளின் உறவுகள் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு மகசின் சிறைச்சாலைக்கு இன்றைய தினம் (10) சர்வதேச கவனமொன்றை ஈர்த்துக் கொள்ளும் வகையில் பயணத்தை மேற்கொண்டனர்.

குரலற்றவர்களின் குரல் அமைப்பு, யாழ் ஊடக அமையத்தில் இன்று (10) மதியம் 2மணியளவில் நடாத்திய ஊடக சந்திப்புக்கு பின்னர் இந்த பயணத்தை ஒழுங்குபடுத்தப்பட்ட பேருந்தில் மேற்கொண்டனர்.

தேசிய சிறைக் கைதிகள் தினம் செப்டம்பர் 12ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் இந்த பயணம் ஆரம்பிக்கப்பட்டதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்தார்.

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் சிலர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வலுச்சேர்க்கும் வகையில் அரசியல் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ் மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி இயக்க ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள், யாழ் மாநகர பிரதி முதல்வர் து.ஈசன், யாழ் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன், யாழ் மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்க பிரதிநிதிகள் எனப் பலரும் யாழ் ஊடக அமையத்திற்கு வருகைதந்து பயணத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கு, உறவினர்கள் சென்று வருவதற்கான போக்குவரத்து ஒழுங்குகளை கனேடிய தமிழர் பேரவை யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், மாநகர உறுப்பினர் பார்த்தீபன் ஊடாக ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert