März 28, 2024

உலகத் தமிழர் அமைப்பே ஒருவர் தான்: இவர்களைத் தான் அரசாங்கம் பயன்படுத்தும் – கஜேந்திரகுமார்

உலகத் தமிழர் அமைப்பில் இரண்டே இரண்டு பேர்தான் இருக்கிறார்கள். அதன் தலைவர் இமானுவல் அடிகளார் மற்றது பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அவர்கள். இமானுவல் அடிகளாரின் வயதால் அவரால் இயங்க முடியவில்லை. இப்போது ஒருவர் தான் இருக்கிறார். உலகத் தமிழர் பேரவை கூறி எவரும் எதையும் செய்யப் போவதில்லை. துர்அதிஸ்டவசமாக இந்த அரசாங்கம் அப்படிப்பட்ட ஆட்களை வைத்துக்கொண்டு தான் செய்யலாம் என தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். கொழும்பிலிருந்து இயங்கும் சூரியன் எவ்.எம்முக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலம் தெரிவிக்கையில்:-

கேள்வி:-
நாட்டினுடைய பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவதற்கு புலம்பெயர்ந்த தமிழ்  மக்களின் உதவிகளை பெறுவதற்க அரசாங்கம் நேரடியாகக் கேட்டுள்ளது. இதற்காக ஒரு அலுவலகத்தைத் திறப்பதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருந்ததார். அரசாங்கமானது புலம்பெயர் தமிழ் மக்களை நாடுவதற்கு புலம்பெயர் தமிழர்கள் மற்றும் அமைப்புகள் மீதான தடைகளை நீக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து உங்களுடைய கருத்து என்ன?

பதில்:– புலம்பெயர்ந்த மக்களை அணுகுவதாக இருந்தால் ஐக்கிய தேசியக் கட்சியின் முகவர் அமைப்பாக இருக்கின்ற கனேடியத் தமிழ்க் காங்கிரஸ் யுஸ்டிபக் போன்ற ஒரு சில அமைப்புகள் மீதான தடைகளை நீக்குவது ஊடாக புலம்பெயர் தமிழ் மக்களை அரவணைக்கலாம் என்று நினைப்பது என்னைப் பொறுத்தவரையில் ஒரு மடைத்தனம்.

இரண்டாவது ஒரு சில அமைப்புகள் மீதான தடையை நீக்கிவிட்டு பெரிய பெரும்பாலான அமைப்புகள் மீதான தடையை வைத்துக்கொண்டிருக்கிற நிலையில், தடை நீக்கப்பட்ட அமைப்புகள் உதவி செய்யுங்கோ என்று மக்களைக் கேட்டால் என்று ஒரு உதாரணத்திற்கு வைத்துக்கொண்டால் கூட புலம்பெயர் தமிழ் மக்கள் உதவி செய்யப்போறது இல்லை. 

யதார்த்தம் என்ன? ஏன் இந்த மக்கள் இத்தீவை விட்டு வெளியேறினார்கள்? அவர்களுக்கு ஏதோ ஒரு பிரச்சினை இருந்தபடியால் தான் இந்தளவு தொகையில் மக்கள் வெளியேறியிருக்கிறார்கள். அந்தப் பிரச்சினையைத் தீர்க்காமல்  அந்ந மக்கள் திரும்பி வரப்போவதில்லை. 

அந்தப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நீங்கள் தயாரா? இல்லை. இதே ஜனாதிபதி 2001 ஆண்டு பிரதமராக இருக்க உலகம் எங்களுக்குச் சொன்னது ரணில் நல்லவர், எல்லாம் கொடுப்பதற்குத் தயார். தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தயார். புலி தேவையில்லாமல் வந்து குழப்பினது என்று சொன்னது

உச்ச பதவியில் ஜனாதிபதியாக வந்திருக்கிற ரணில் விக்கிரமசிங்க தன்னுடைய கொள்கைப் பேச்சில் என்ன சொன்னார்? தன்னுடைய கனவு இங்ககே தமிழ், முஸ்லிம், சிங்களவர் என்ற வேறுபாடுகள் இருக்கக்கூடாது என்று சொன்னார். தமிழ், முஸ்லிம், சிங்களவர் என்ற வேறுபாடுகள் இருக்கக்கூடாது என்று சொன்னால் இங்கே இலங்கையர் என்ற ஒரே ஒரு அடையாளம் மட்டுமே இருக்க வேண்டும் என்று சொன்னால், கடந்த 75 வருடங்களாக நீங்கள் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் தான் செயற்பட்டீர்கள்? 75 விழுக்காடு மக்கள் தான் அடையாளம். மற்ற 25 வீழுக்காடும் கள்ளத் தோணிகள் என்ற அடிப்படையில் தானே நடந்துகொண்டீர்கள்.

75 வருடங்களாக அப்படி இருந்து விட்டு இபோது வந்து நாங்கள் இலங்கையர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்று சொல்வது. ரணிலின் இலக்கே அதுதானாம்.  எந்தளவு தூரத்திற்கு, அவர் 2001 ஆம் ஆண்டு நடித்தவர் என்பதைத் தான் தமிழன் பார்ப்பான்.

இதில் பாதிக்கப்பட்டு இங்கே இருக்க முடியாது என்று புலம்பெயர்ந்த நாடுகளுக்குச் சென்ற தமிழன் இதை ஏற்றுக்கொள்வார்களா என்று நீங்கள் நினைக்கீர்களா?

கேள்வி:- இது தொடர்பாக அண்மையில் எமது ஊடகத்திற்கு கருத்து தெரிவித்திருந்து உலகத் தமிழர் பேரவை அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அவர்கள் இலங்கை பொருளாதார நெருக்கடிக்குத் தாங்கள் உதவி செய்யத் தயாராக இருப்பதாகவும், அந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு பலம் இருப்பதாகவும், சில அரசியல் யாப்பில் சில திருத்தங்களையும் கொண்டு வரவேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். நீங்கள் குறிப்பிடும் கருத்தைப் பார்க்கும் போது அவருடைய குரலை (சுரேன்) வைத்துக்கொண்டு ஒட்டு மொத்த உலகத் தமிழர்களின்  கருத்தாக ஏற்றுக்கொண்ட முடியாது என்ற தெரிகிறது.

பதில்:- உலகத் தமிழர் அமைப்பில் இரண்டே இரண்டு பேர்தான் இருக்கிறார்கள். அதன் தலைவர் இமானுவல் அடிகளார் மற்றது பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அவர்கள். இமானுவல் அடிகளாரின் வயதால் அவரால் இயங்க முடியவில்லை. இப்போது ஒருவர் தான் இருக்கிறார். உலகத் தமிழர் பேரவை கூறி எவரும் எதையும் செய்யப் போவதில்லை. துர்அதிஸ்டவசமாக இந்த அரசாங்கம் அப்படிப்பட்ட ஆட்களை வைத்துக்கொண்டு தான் செய்யலாம்.

இந்ந அரசாங்கத்திற்கு வந்து ஒரு பெறுமதி வந்து இந்த நாட்டில் இருக்கிறது சிங்கள மக்களாலேயே அங்கீகாரம் கொடுப்பதற்குத் தயாரில்லாத நிலையில் தமிழன் கடைசி வரைக்கும் எதுவும் கொடுக்கப்போவதில்லை. 

இப்படி வெற்றுக்கோசமாக இருக்கக்கூடிய ஜி.ரி.எவ் போன்ற அமைப்புகளை வைத்துக்கொண்டிருக்கிற ஒருவரை வைத்துக்கொண்டு தான்  இந்த கருத்துகளைப் பரப்புவதற்கு இயங்கலாம்.

ஜி.ரி.எவ் உடன் எந்த அமைப்புகளை அடையாளப்படுத்தினார்கள் என்று பாருங்கள் சிரிசி ( கனேடியன் தமிழ் காங்கிரஸ்) ஒரு பினாமி. இதுவும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு முகவர் அமைப்பு. சி.ரி.சி, ஜி.ரி.எவ் தவிர எவரும் இவர்களுடன் அடையாளப் படுத்தத் தயாராக இல்லையே? 

எங்களைப் பொறுத்தவரையில் ரணில் விக்கிரமசிங்க, தன்னுடைய முகவர்களை வைத்து  தமிழர்களை ஏமாற்றலாம் என்று எதிர்பார்ப்பது மடத்தனம். ஏனென்றால் அப்படி ஏமாற்றுவதற்கு தமிழன் தயாராக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வளவு தூரம் விழுந்திருக்க வேண்டி தேவையில்லை.

சாதாரணமாக கடந்த தேர்தலுக்கு பிறகு இன்றைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தமிழ் மக்கள் மட்டத்தில் போக முடியாமல் உள்ள நிலைமைதான் இருக்கிறது. அந்த அரசியலை தமிழ் மக்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். நிராகரிக்கிறார்கள். 2015 கொண்டு வந்த அதே விளையாட்டை ரணில் விக்கிரமசிங்க தனி மனிதராக நாடாளுமன்ற உறுப்பினராக மக்களால் தெரிவு செய்யப்படாமல் கட்சி தெரிவு செய்து தற்போது கட்சியால் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் அவர் செய்யலாம் என்று எதிர்பார்ப்பது என்பது பகல் கனவு. இவை ஒன்றுமே சரிவரப்போவதில்லை. அப்படி அவர் தொடங்கி விட்டு ஒன்றுமே சரிவரவில்லை என்பதை நிரூபிக்க இரண்டு மூன்று வருடங்கள் தேவைப்படலாம். 2015 நாங்கள் சொன்னனாங்கள் ஒன்றுமே சரிவரப்போவதில்லை என்று கூறினாங்கள் அப்போது ஒருவரும் அதைக் கேட்கவில்லை. ஆனால் 5 வருடங்களின் பின் கேட்டவர்கள் தானே? தமிழ் மக்கள் காலத்தை இழுத்தடிக்கிற நிகழ்ச்சி நிரலுக்குள் செல்வதற்குத் தயாராக இல்லை. இப்போது சிங்கள மக்களும் அந்த நிலைக்கு வந்து விட்டார்கள்  என்றார்.

மேலதிக விபரங்களை காணொளியில் பார்க்கலாம்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert