April 20, 2024

சோதிமலர் பரஞ்சோதி அவர்களுக்கு „நாட்டுப்பற்றாளர்“ என மதிப்பளிப்பு

கனடாத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தேசியச்செயற்பாட்டாளர் சோதிமலர் பரஞ்சோதி  அவர்கள், 16.06.2022 அன்று உடல்நலக்குறைவு காரணமாகச் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைத் துயரில் ஆழ்த்தியிருக்கின்றது.

தமிழீழ விடுதலைப்போராட்டச் செயற்பாடுகளில் தன்னை இணைத்துக்கொண்ட சோதிமலர் பரஞ்சோதி அவர்கள், நீண்டகாலமாகத் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தில் உறுப்பினராக இணைந்து விடுதலைச் செயற்பாடுகளில் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டவராவார். 

தமிழீழத்தின் மீதும் தேசியத் தலைவர் மீதும் கொண்ட பற்றுக்காரணமாக, 2007ஆம் ஆண்டிலிருந்து தாயகத்தில் முழுமையாகத் தங்கியிருந்து விடுதலைப்போராட்டத்திற்கான மிகமுக்கிய பணிகளை முன்னெடுத்து, 2008 ஆம் ஆண்டு தேசியத்தலைவரின் பணிப்பிற்கமைய கனடா திரும்பி, தாயகத்தில் மக்களின் அவலங்களைத் தனது ஆங்கிலப் புலமையூடாகக் கனடிய அரசியல்வாதிகளுக்கு எடுத்துரைத்தவராவார்.

2009ஆம் ஆண்டிற்குப் பின்னரான காலங்களில் தென்தமிழீழத்திற்குச் சென்று கல்வியில் பின்தங்கிய கிராமங்களை இனங்கண்டு, கல்விநிலையங்களை உருவாக்கித் தானும் ஒரு ஆசிரியராகக் கடமையாற்றிப் பலரின் கல்விவளர்ச்சிக்கு உதவியதுடன், உயர்கல்விக்குத் தேவையான பொருளாதார வளங்களைப் பல மாணவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்ததுடன், சுயதொழில் வாய்ப்புக்களைப் பலருக்கு ஏற்படுத்திக்கொடுப்பதில் தன்னாலான உதவிகளைச் செய்தவராவார்.

இத்தகைய விடுதலைப்பற்றுறுதியுடன் இறுதிவரை செயற்பட்ட செயற்பாட்டாளரைத் தமிழ்மக்கள் இழந்து நிற்கின்றனர். இவரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதுடன், சோதிமலர் பரஞ்சோதி  அவர்களது தேசப்பற்றுக்காகவும் தமிழினத்திற்கு ஆற்றிய பணிக்காகவும் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம், 
தமிழீழ விடுதலைப் புலிகள்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert