März 28, 2024

பிச்சை எடுத்து அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தோம்

தெஹிவளை கொஹூவலை சந்தியில் பாலம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு தன்னை அழைக்கவில்லை என தெஹிவளை -கல்கிஸ்சை முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்ககவலை வெளியிட்டுள்ளார்.

இது சம்பந்தமாக தனது கவலையை வெளியிட்டு முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ள அமரதுங்க, அரசாங்கத்தை உருவாக்க கோடிக்கணக்கில் பணத்தை செலவிட்டவர்களை அரசாங்கம் தற்போது மறந்து விட்டதாக கூறியுள்ளார்.

“ கொஹூவலை சந்தியில் பாலம் ஒன்றை நிர்மாணிக்க அடிக்கல்லை நாட்ட வெளிநாடு ஒன்றின் அமைச்சர் ஒருவரும், எமது நாட்டின் பெருந்தெருக்கள் அமைச்சர் எனது நண்பர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் வந்து சென்றுள்ளனர்.

தெஹிவளை தொகுதியின் ஆளும் கட்சியின் அமைப்பாளர் நான். எனக்கு எவரும் அழைப்பு விடுக்கவில்லை. எனக்கு தெரியாது என்பது கவலைக்குரியது. தனிப்பட்ட வேலை ஒன்றுக்காக நுகேகொடைக்கு செல்லும் வழியில் பொலிஸாரும் மக்களும் அதிகளவில் கூடி இருப்பதை கண்டேன்.

அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை தொலைபேசியில் தொடர்புக்கொண்டேன். மேம்பாலம் ஒன்றை நிர்மாணிக்க அடிக்கல் நாட்டப்படுவதாக அவரே எனக்கு கூறினார். புதுமையான அரசாங்கம்.

அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர நாங்கள் கஷ்டப்பட்டோம். கோடிக் கணக்கில் பணத்தை செலவிட்டோம். வாக்கு பிச்சை எடுத்து அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தோம்.

ஆட்சிக்கு வந்த பின்னர், அரசாங்கத்தில் இருக்கும் பெரியவர்கள், அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர உழைத்த எங்களை மறந்து விட்டனர் என்பது கவலைக்குரியது.

எனினும் நான் இன்னும் மகிந்த ராஜபக்சவை உயிரை போல் நேசிக்கின்றேன்” என தனசிறி அமரதுங்க குறிப்பிட்டுள்ளார். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert