April 24, 2024

முல்லையிலும் ஒரு வித்தியாவா?

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு கிராமத்தில் காணாமல் போன 12 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மூங்கிலாறு வடக்கு, 200 வீட்டுத் திட்டம் என்ற கிராமத்தில் கடந்த 15ஆம் திகதி காணாமல் போன சிறுமி, இன்று வீட்டிற்கு சற்று தொலைவில் வெற்றுக்காணிக்குள் இருந்து சடலம் மீட்கப்பட்டது.

யோகராசா நிதர்சனா (12) என்ற சிறுமியே சடலமாக மீட்கப்பட்டர்.

சிறுமியின் உடலில் ஆடைகள் களையப்பட்டு, உருக்குலைந்த நிலையில் சடலம் காணப்படுகிறது.

ஒரு கை உடலில் இருக்கவில்லை. விலங்குகள் சேதப்படுத்தியிருக்கலாமென கருதப்படுகிறது.

இதேவேளை, நேற்று அந்த பகுதியில் இராணுவத்துடன் இணைந்து தேடுதல் நடத்திய போது, சடலம் காணப்படவில்லையென்றும், இரவோடு இரவாகவே அந்த இடத்தில் சடலம் கொண்டு வந்து போடப்பட்டிருக்க வேண்டுமென பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

சற்று தொலைவிலுள்ள ஆற்றிற்குள் சடலம் இருந்திருக்க வேண்டுமென்றும், அதனாலேயே சடலம் ஊதி காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.

சடலத்தை மீட்ட பொலிசார் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். முல்லைத்தீவு பதில் நீதவான் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.

சந்தேகத்தின் பேரில் ஒருவர் பொலிசாரின் விசாரணை வளையத்திற்குள் உள்ளார்.

சில வருடங்களின் முன்னர் பாடசாலை மாணவி வித்தியா கடத்தி கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, வடக்கில் மீண்டுமொரு கொடூர சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.