April 24, 2024

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று(10) தமது உறவுகளின் உரிமைகளை வேண்டி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை  முன்னெடுத்துள்ளனர்.முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டத்தை  முன்னெடுத்துவரும் முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்துக்கு முன்பாக இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  யுத்தம் முடிவடைந்த நாள் முதல் இன்று வரை  12 வருடங்களாக தமது உறவுகளை தேடி போராடிவருகின்ற நிலையில் கடந்த 2017  ஆம் ஆண்டு மார்ச் மாதம்  எட்டாம் திகதி முதல் வீதியில் அமர்ந்து தொடர்ச்சியான போராட்டத்தை ஆரம்பித்த நிலையில் இன்று 1737 ஆவது நாளாகவும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கை இராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட  தமது உறவுகளையும்  யுத்த காலங்களில் கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளையும் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு   காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளையும் என  பல்வேறு வழிகளில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியை கோரியே இந்த தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.