März 28, 2024

இலங்கையில் அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அண்டனி பிளிங்கனிடம் அமெரிக்க பிரதிநிதிகள் வலியுறுத்து

pinterest sharing button
email sharing button
sharethis sharing button

இலங்கையில் அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தி அமெரிக்க பிரதிநிதிகள் கிரிகோரி டபிள்யூ. மீக்ஸ் மற்றும் மைக்கல் மெக்கால் ஆகியோர் அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

கணிசமான மற்றும் நீடித்த அரசியல் தீர்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இலங்கையில் அதன் முயற்சிகளில் மீண்டும் கவனம் செலுத்துமாறு அவர்கள் அண்டனி பிளிங்கனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து ஏறக்குறைய 30 ஆண்டுகாலம் நிறைவடைந்துள்ள நிலையில் பிரிக்கப்படாத இலங்கையில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு உட்பட அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களுக்கான அவசியம் குறித்தும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆகவே அத்தகைய தீர்வுகளைக் காண தமிழ் மற்றும் முஸ்லிம்கள் உட்பட எதிர்க்கட்சிகளுடன் இலங்கை அரசாங்கத்தின் ஈடுபாட்டை வலியறுத்துமாறும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தை அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

இலங்கை மக்களின் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்லும் அதே வேளையில், இந்த முயற்சியை ஆதரிக்கவும் அதற்கான வசதியை ஏற்படுத்தி கொடுக்கவும் அமெரிக்கா தயாராக உள்ளது என்பதை திணைக்களம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இறுதியில், எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் தமிழ் , முஸ்லிம் மக்கள் உட்பட இலங்கை பிரஜைகள் அனைவரினதும் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இருக்க வேண்டிய அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.