April 19, 2024

தமிழ் கட்சிகளிடம் வெளியுறவுக்கொள்கை உண்டா? | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகிறார்

தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற ஒரு கூட்டுக் கோரிக்கையை இந்தியாவை நோக்கி முன்வைக்க வேண்டும் என்று டெலோ இயக்கம் ஒரு முயற்சியை முன்னெடுத்து வருகிறது. இம்முயற்சியில் மூன்று தமிழ் தேசியக் கட்சிகளோடு முஸ்லிம் கொங்ரஸையும் மனோ கணேசனின் கட்சியையும்  ஒருங்கிணைத்திருக்கிறார்கள். ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள மிகப் பெரிய கட்சியான தமிழரசுக் கட்சியை ஒருங்கிணைக்க முடியவில்லை.

மேற்கண்ட முயற்சிகள் தொடக்கப்பட்டபின் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் சம்பந்தரை இரண்டு தடவைகள் சந்தித்தது. டெலோ இயக்கத்தின் மேற்கண்ட முயற்சியை நோக்கி தமிழரசுக் கட்சியை ஊக்கப்படுத்துவது மேற்படி சந்திப்புகளில் உள்நோக்கம் என்று கருதப்படுகிறது. ஆனால் தமிழரசுக் கட்சி இன்றுவரையிலும் அதற்கு சாதகமாக பதில்வினையாற்றவில்லை..

மாறாக சுமந்திரன் தலைமையிலான ஒரு சட்டவாளர் குழு அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று அவர்கள் சென்றதாக சம்பந்தரும் சுமந்திரனும் கூறுகிறார்கள். ஆனால் அக்குழுவில் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளடக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல அப்படி ஒரு குழுவை அனுப்ப இருப்பதாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு தெரியாது.எனவே அக்குழுவை கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ குழுவென்றோ அல்லது தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ குழுவென்றோ கூறுவது பொருத்தமாக இருக்குமா? அல்லது பங்காளிக் கட்சிகளின் நகர்வை மேவியோடும் ஒரு முயற்சியா அது?

இப்படி ஒரு குழு அமெரிக்காவுக்கு விஜயம் செய்து எதை சாதிக்கப் போகிறது? சம்பந்தரும் சுமந்திரனும் அவர்களுடைய ஆதரவாளர்களும் கூறுகிறார்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசாங்கத்தின் மீது அமெரிக்காவின் அழுத்தத்தை பிரயோகிக்க வைப்பதே அக்குழுவின் நோக்கம் என்று. இலங்கை அரசாங்கம் ஒரு புதிய யாப்பை கொண்டுவர இருப்பதாக கூறி வருகிறது. அப்படி உருவாக்கினால் அதில் இனப்பிரச்சினைக்கான தீர்வையும் உள்ளடக்க வேண்டும். தீர்வு தமிழ் மக்களுக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும் என்று சொன்னால் அதற்கு அமெரிக்காவின் அழுத்தம் அவசியம் என்று சம்பந்தரும் சுமந்திரனும் நம்புகிறார்களா ?ஆயின் அது சரிதான்.

இது விடயத்தில் இனப்பிரச்சினையின் பல தசாப்த கால அனுபவத்தை தொகுத்துப் பார்த்தால் அது தெளிவாக தெரியும். ஒரு மூன்றாவது தரப்பின் தலையீடு இன்றி இனப்பிரச்சினைக்கான தீர்வை காண முடியாது. சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதமானது ஒரு வெளித் தரப்பின் அழுத்தம் இல்லாமல் இறங்கி வராது. இது கடந்த பல தசாப்த கால இலங்கைத் தீவின் வரலாற்றில் நிரூபிக்கப்பட்ட ஒரு பேருண்மை. இலங்கைத் தீவின் இனப் பிரச்சினை தொடர்பில் இதுவரை எழுதப்பட்ட எல்லா உடன்படிக்கைகளிலும் ஒப்பீட்டளவில் நீண்ட காலம் நீடித்து இருந்தவை மூன்று உடன்படிக்கைகள். முதலாவது இந்திய-இலங்கை உடன்படிக்கை.இரண்டாவது ரணில்-பிரபாகரன் உடன்படிக்கை. மூன்றாவது நிலைமாறுகால நீதிக்கான ஐநா தீர்மானம்.

இம்மூன்று உடன்படிக்கைகளின் போதும் மூன்றாவது தரப்பின் மத்தியஸ்தம் இருந்தது. இந்திய-இலங்கை உடன்படிக்கையை அமல்படுத்த இந்திய அமைதி காக்கும் படை இறங்கியது.ரணில்-பிரபாகரன் உடன்படிக்கையின் போது ஸ்கண்டிநேவிய யுத்தநிறுத்த கண்காணிப்பாளர்கள் இறங்கினார்கள். ஐநா தீர்மானத்தின் பின் இலங்கைத்தீவை  கருக்குழு நாடுகளும் ஐநாவின் சிறப்புத் தூதுவர்களும் தொடர்ச்சியாகப் பின் தொடர்ந்தார்கள். எனவே ஒரு மூன்றாவது தரப்பின் மத்தியஸ்தம் இன்றி இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடையாது. இப்பொழுது கேள்வி யார்  அந்த மூன்றாவது தரப்பு ? என்பதுதான்.

மேற்கண்ட மூன்று தீர்வு முயற்சிகளின் போதும் இரண்டு தரப்புகள் மத்தியஸ்தம் வகித்தன. இந்திய-இலங்கை உடன்படிக்கையில் இந்தியா. பின் வந்த இரண்டு ஏற்பாடுகளிலும் மேற்கு நாடுகள். 2000 ஆண்டு விடுதலைப் புலிகளின் காலத்திலிருந்து தொடங்கி இன்று வரையிலுமான கடந்த 21ஆண்டுகளில் மேற்கு நாடுகளே ஒன்றில் அனுசரணை புரிகின்றன அல்லது மத்தியஸ்தம் வகிக்கின்றன.

இதில் முதலாவது கட்டம் 2009 வரையிலுமானது. மேற்கு  நாடுகள் மற்றும் ஜப்பானின் பின்பலத்தோடு முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளின் போது   நோர்வே சமாதானத்துக்கான அனுசரணையாளராக செயற்பட்டது. அந்நாட்டின் விசேஷ தூதுவரான சொல்ஹெய்ம் சமாதான நடவடிக்கைகள் தொடர்பான எல்லா விடயங்களையும் இந்தியாவுக்கு தொடர்ச்சியாக அப்டேட் செய்து வந்தார்.. இது முதலாம் கட்டம்.

இரண்டாம் கட்டம் 2009 க்குப் பின்னரான ஜெனிவா மைய அரசியல். அதன் ஒரு கட்ட விளைவே  2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் ஆகும். அது நிலைமாறுகால நீதியை ஈழத் தமிழர்களுக்கு ஒரு தீர்வாக பரிந்துரைக்கின்றது.  ஆனால்,இலங்கைத்தீவுக்கான நிலைமாறுகால நீதியின் பெற்றோரில் ஒருவரான மைத்திரிபால சிறிசேன 2018ஆம் ஆண்டு  யாப்புச் சதி.  ஒன்றின் மூலம் நிலைமாறுகால நீதியை  அனாதையாக்கினார்.  எனினும் ஜெனிவா மைய அரசியல் அதோடு முடிவுக்கு வரவில்லை ஐநா தீர்மானங்களில் இந்தியா 13வது திருத்தத்தை ஒரு தீர்வாக உட்புகுத்திவிட்டது. அதாவது இந்தியா ஐநா மைய மத்தியஸ்த முயற்சிகளில் 13வது திருத்தத்தை ஒரு தீர்வாக உட்செலுத்தி விட்டது என்று பொருள்.

எனவே 2000 ஆண்டிலிருந்து தொடங்கி மேற்கு மைய சமாதான முயற்சிகள் எல்லாவற்றிலும் இந்தியா நேரடியாகவோ மறைமுகமாகவோ செல்வாக்குச் செலுத்தி வருகிகிறது.அதுதான் இலங்கை இனப்பிரச்சினையின் புவிசார் அரசியல் யதார்த்தமாகும். இந்தியாவை மீறி எந்த ஒரு வெளிச் சக்தியும் இனப்பிரச்சினைக்கான தீர்வைத் தர முற்படாது என்பதுதான் கடந்த 20 ஆண்டுகால மேற்கு மைய மத்தியஸ்த முயற்சிகளின் மூலம் கற்றுக்கொள்ளப்பட்ட பாடம் ஆகும். தமிழ் மக்கள் இந்த புவிசார் அரசியல் யதார்த்தத்தை விளங்கிக்கொண்டு இந்தியாவின் பிராந்திய நலன்களும் ஈழத்தமிழர்களின் நலன்களும் ஒன்றை ஒன்று வெட்டும்  பொதுப் புள்ளிகளை வைத்து பேரத்தை பேசவேண்டும்.

அதற்கு முதலில் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கட்சிகள் அனைத்தும்   ஒரு பொதுவான வெளியுறவு அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக ஓடக்கூடாது. குறுக்கோட்டமும்  கூடாது. அவ்வாறு பொதுவான ஒரு வெளியுறவு அணுகுமுறைக்கு  ஒரு பொதுவான வெளியுறவுக் கொள்கை அவசியம். ஒரு பொதுவான வெளியுறவு கட்டமைப்பு அவசியம். அவ்வாறான பொருத்தமான வெளியுறவுக்  கட்டமைப்பு இல்லாத ஒரு வெற்றிடத்தில்தான் ஒரே கூட்டமைப்புக்குள் இரு வேறு ஓட்டங்கள் நிகழ்கின்றன. ஒரு ஒருபக்கம் ஐந்து  கட்சிகள் இணைந்து 13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று  இந்தியாவைக் கேட்க விளைகின்றன. அதாவது இந்தியாவை ஒரு கூட்டுக் கோரிக்கையின் மூலம் உள்ளே கொண்டு வர வேண்டும் என்று முயற்சிக்கின்றன. ஆனால் அம்முயற்சிகளை மேவியோட முற்படும் சம்பந்தரும் சுமந்திரனும் மேற்கு நாடுகளை கொண்டு இலங்கைத் தீவின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க லாமா என்று சிந்திக்கிறார்கள்.

அமெரிக்க விஜயத்தின் பின் கனடாவில் உரை நிகழ்த்திய சுமந்திரன் அதைக் குறித்துப் பேசியுள்ளார் அமெரிக்க சந்திப்புகளின் பின் அங்கே என்ன பேசப்பட்டன என்பவற்றை வோஷிங்டனில் உள்ள இந்திய தூதுவருக்கும் நியூயோர்க்கில் உள்ள ஐநாவுக்கான இந்திய பிரதிநிதிக்கும் தான் எடுத்துரைத்ததாக சுமந்திரன் கனடாவில் வைத்து கூறியுள்ளார். நோர்வே சமாதானத்துக்கு அனுசரணை புரிந்த காலகட்டத்தில் சொல் ஹெய்ம் வன்னியில் என்ன பேசப்பட்டது என்பதை ஒவ்வொரு முறையும் இந்தியாவுக்கு அப்டேட் செய்ததும் சுமந்திரன் அமெரிக்க விஜயத்தில் பேசப்பட்டவற்றை இந்தியாவுக்கு அப்டேட் செய்வதும் ஒன்றல்ல. ஏனென்றால் சொல்ஹெய்ம் ஒரு அனுசரணையாளர், விஷேஷ தூதுவர். ஆனால் சுமந்திரன்  பிரச்சினையில் சம்பந்தப்பட்ட ஒரு தரப்பின் பிரதிநிதி. அவர் தனது மக்களின் நோக்கு நிலையில் இருந்து ஒரு வெளியுறவுக் கொள்கையின் பிரகாரம் செயற்பட வேண்டியவர். ஆனால் நடப்பு நிலைமைகளை  உற்றுக் கவனித்தால் அப்படி ஒரு பொதுவான வெளியுறவுக் கொள்கை ஏதும் தமிழ் கட்சிகள் மத்தியில்  கிடையாது. அதைவிட குறிப்பாக ஒரே கூட்டமைப்புக்குள்ளேயே  இருவேறு  ஓட்டங்கள். அவை ஒரு தேசமாக சிந்தித்து, வெளிவிவகார நோக்கு நிலையிலிருந்து தீர்மானிக்கப்பட்ட தந்திரோபாய ஓட்டங்கள் அல்ல. மாறாக நான் பெரிதா நீ பெரிதா என்ற அகந்தையின் பாற்பட்ட ஓட்டங்களாகவே தெரிகின்றன.

சீனா ஒரு பிராந்திய பேரரசு என்ற நிலையிலிருந்து  பூகோளப் பேரரசு என்ற ஒரு வளர்ச்சியை நோக்கிப்  போக முற்பட்டதன் பின்னணியில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றும் மற்றதில் தங்கியிருக்கும்  பூகோளப் பங்காளிகளாக மாறிவிட்டன. சீனாவை எதிர்கொள்வதற்கு இப்பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா தேவை. அதேபோல உலக அளவில் இந்தியாவுக்கும் அமெரிக்கா தேவை என்ற நிலை உருவாகிவிட்டது. covid-19 சூழலானது இத்துருவமயப்படலை அதிகப்படுத்தி இருக்கிறது. எனவே அமெரிக்காவை எப்படித்தான் கெட்டித்தனமாகக் கையாண்டாலும் இறுதியிலும் இறுதியாக அமெரிக்கா இந்தியாவிடந்தான் கொண்டு போய்விடும் என்பதுதான் இப்போதுள்ள புவிசார் அரசியல் யதார்த்தமாகும்.

ஆனால் இப்பூகோளப்  பங்காளிகளை கூட்டமைப்பின் இரு வேறு தரப்புக்கள் தனித்தனியாக அணுகுவதே  இங்கு வேடிக்கையான ஒரு விடயமாகும். ஒரு சிறிய தீவில் ஒரு சிறிய மக்கள்  கூட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளில் ஒப்ட்டளவில் பெரிய ஒரு கட்சி, அதன் வெளிவிவகார அணுகுமுறையில் இரண்டாகப்  பிரிந்து நிற்கிறதா ? தமிழ்க்கட்சிகள் இறந்த காலத்திலிருந்து எதையுமே கற்றுக் கொள்ளப் போவதில்லையா?