April 16, 2024

தடை விதிக்க மறுத்தது சாவகச்சேரி நீதிமன்றம்!

மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில்,    முல்லைத்தீவில் மாவட்டத்தில் முப்படைகளாலும்  பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மாவீரர் தின நிகழ்வுகளை முன்னெடுக்காதிருக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு தடை விதிக்க சாவகச்சேரி நீதிமன்றில் காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

சட்டவாக்க சபையான நாடாளுமன்றின் உறுப்பினர்களிற்கு அது பற்றி தெரிந்தேயிருக்கும்.ஆயினும் அதனை தெரிந்து சட்டமீறலில் ஈடுபட்டால் கைது செய்யமுடியுமெனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதனிடையே வடகிழக்கில் மேலதிகமாக வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், வீதிச் சோதனை நடவடிக்கைகளும் தீவிரமாக்கப்பட்டுள்ளன. மாவீரர் துயிலுமில்ல வளாகங்களை சூழவும் இராணுவம் மற்றும்  பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வீரகாவியமான வீரமறவர்கள் நினைவாக வருடம் தோறும்  கார்த்திகை  மாதம் 27 ஆம் திகதி மாவீரர் நாள்  உலகமெங்கும் வாழும் தமிழ் உறவுகளால் உணர்வுபூர்வமாக  அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

கார்த்திகை  21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரமாக  கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இதனிடையே இம்முறையும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம் பெறுவதாக தெரிவித்து அதற்கான தடையுத்தரவும் பெற்றுக்கொள்ளப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் சாவகச்சேரி நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துள்ளது.