April 25, 2024

முல்லைத்தீவில் இளம் பெண்ணை கட்டிவைத்துவிட்டு கொள்ளை

முல்லைத்தீவு, முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணை கட்டிவைத்துவிட்டு வீட்டில் இருந்த பணம்,நகை,தொலைபேசி என்பன கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பூதன்வயல் கிராமத்தில் வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்த இளம் குடும்ப பெண்ணின் வீட்டிற்குள் நுளைந்த மூன்று கொள்ளையர்கள் தங்களை அடையாளம் காணாதவாறு முகத்தினை மூடி வீட்டிற்குள் நுளைந்து வீட்டில் இருந்த பெண்ணின் கை,கால்களை கட்டிவைத்துவிட்டு வீட்டில் இருந்து சுமார் 25 இலட்சம் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துள்ளனர்.

கணவனை பிரிந்த நிலையில் தனது பிள்ளைகளை யாழ்ப்பாணத்தில் விடுதியில் தங்கி படிக்கவைத்துவிட்டு தனிமையில் இருந்த பெண்ணிடமே கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

16 பவுண் நகை, 5 இலட்சம் ரூபா பணம் மற்றும் பெறுமதியான தொலைபேசி என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மூன்று பேர் கொண்ட கொள்ளைக்கும்பல் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.