März 28, 2024

பச்சோந்திக் கட்சிகள் மீண்டும் ஒன்று கூடின!

பச்சோந்தி அரசியல் செய்யும் முஸ்லீம் கட்சிகள் மீண்டும் ஒன்று கூடி வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிப்பது பற்றி ஆராய்கின்றன.

வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு குறித்து தீர்மானமொன்றை எடுப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அவசரமாக கூடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

20 ஆவது திருத்தத்தின்போது முஸ்லிம் எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவாக செயற்பட்டு வாக்களித்ததால் அதேபோன்று இம்முறை வரவு செலவுத் திட்டத்திலும் அவர்கள் அப்படி நடந்துகொள்ளலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதனையடுத்தே இந்த கூட்டங்கள் நடக்கவுள்ளன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ளது. அக்கட்சியிலிருந்து விலகிய, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் மீண்டும் கட்சியில் இணைவது குறித்து அன்று பேசப்படவுள்ளது. அதேபோல் பட்ஜெட்டை எதிர்த்து வாக்களிப்பதா அல்லது இறுதி வாக்கெடுப்பை தவிர்ப்பதா என்பது குறித்தும் பேசப்படவுள்ளது.

இதற்கிடையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், நாளை மறுதினம் சனிக்கிழமை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார். வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பது என்ற தலைமையின் முடிவை அவர் அன்றையதினம் விபரிக்கவுள்ளார் என்று அறியமுடிந்தது.

எனினும் ரிஷாட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் நேற்று வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளித்து இது எளிய மக்களுக்கான பட்ஜெட் என்று நிதி அமைச்சரைப் புகழ்ந்த நாடாளுமன்றத்தில் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது