März 28, 2024

தாயகத்தில் திட்டமிட்ட பௌத்த ஆக்கிரமிப்பு – எதிர்க்கத் துணியும் தமிழரசுக் கட்சி

 

தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் பௌத்த ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஒன்று திரண்டு போராட்டங்களை முன்னெடுக்கத் தயார் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் அதிகளவான இராணுவத்தினரை குவித்து மக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சிகளை கோட்டாபய – மஹிந்த அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் இனப்பரம்பலை மாற்றுவதற்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடந்த மாதம் போராட்டத்தை முன்னெடுத்திருந்தது.

இந்த நிலையில் இன்றும் திட்டமிட்ட குடியேற்றத்திற்கு எதிரான மக்கள் போராட்டக் குழு மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில் ஆர்பாட்டம் ஒன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் அரச தலைவருக்கு அனுப்பும் வகையில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இதன்போது அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாகச் சாடி மாவை சேனாதிராஜா கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், சி.சிறிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, உட்பட அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.