März 29, 2024

ஆமியிடமுள்ள வீதிக்கு கார்பெட்!

 

கட்டுவன்- மயிலிட்டி வீதியில்,   மயிலிட்டி சந்தியில் இருந்து  யாழ்ப்பாணம் விமான நிலையம் வரையான வீதி காப்பெற் வீதியாக  புனரமைப்பு செய்யும்  பணிகள் இடம்பெற்று வருகின்றது.

இந்த கட்டுவன்- மயிலிட்டி வீதி  கடந்த ஆட்சியில் ஏற்கனவே விமான நிலையம் திறப்பதற்கு அவசரமாக அவசரமாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் இருந்து விமான நிலையம் வரை புனரமைப்பு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது  மயிலிட்டி துறைமுகத்திற்கு அருகில் இருந்து தொடங்கும் மயிலிட்டி சந்தியிலிருந்து விமான நிலையத்துக்கான வீதி புனரமைப்பு பணிகள் இடம்பெறுகின்றது. இந்த வீதியில் உள்ள பாலங்கள் புனரமைப்பு செய்யப்பட்டு இவ்வீதி காப்பெற் வீதியாக மாற்றப்படுகின்றது.

இதேவேளை கட்டுவன் மயிலிட்டி வீதி காப்பெற் வீதியாக புனரமைப்பு செய்தாலும் இடையில் (மயிலிட்டி தெற்கு பகுதியில் 400 மீற்றர் வீதி   இராணுவ கட்டுப்பாட்டினுள் உள்ளது. இவ்வாறு விடுவிக்கப்படாததால் முழுமையாக புனரமைப்பு செய்யமுடியாதுள்ளது.  பல அரச அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை இதனை பார்வையிடுவதும்  வீதியை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினாலும் இதுவரை எட்டாக் கனியாகவே உள்ளது.

இதேவேளை கடந்த புதன்கிழமை வடக்கு மாகாண ஆளுநருடனான ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த வீதி விடுவிக்காமல் இருப்பது தொடர்பில் ஆளுநரிடம்  கேட்டபோது தாம் இந்த வீதி பிரச்சினையை அறிந்ததாகவும் அரச அதிபரிடமும் விபரம் பெற்றுள்ளேன் வீதியை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.