April 18, 2024

சீமெந்திற்கு வரிசையில் சிங்கியடிப்பு:பேரரசர் நாட்டிலில்லை!

கொரோனா பெருந்தொற்றின் போது பொதுமக்களில் கணிசமானவர்களிற்கு வேலை வாய்ப்பை வழங்கிய கட்டுமான தொழில் முடங்க தொடங்கியுள்ளது.

இலங்கை அரசு கட்டுமான பணியாளர்களிற்கு நடமாட தடை விதிக்காததன் மூலம் அவர்களது பொருளாதாரத்தை பேண உதவியது.தற்போது சீமெந்து வாங்கவும் வரிசையில்; அதிகாலை முதல் மக்கள் கூட்டம் கூட்டமாக வரிசைக்கு சென்றுள்ளனர்.

கடந்த மாதம் முதல் நாட்டில் சிமெந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் சீமெந்து வாங்க மக்கள் வரிசையில் நிற்கின்றனர்.

சிமெந்து தட்டுப்பாடு காரணமாக சிமெந்து தொடர்பான பல தொழில்கள் முடங்கியுள்ளதாக சீமெந்து வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தொழில் வீழ்ச்சியால்  சீமெந்து தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யுமாறு நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர். சில பிரதேசங்களில் சீமெந்து பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர்.

இந்நிலையில் சீமெந்து கொள்வனவு செய்வதற்கு அதிகாலை 3.00 மணி முதல் தம்புள்ளையில் உள்ள கடையொன்றுக்கு முன்பாக நீண்ட வரிசையில் காத்து நிற்க வேண்டியுள்ளதாக சீமெந்து பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், ஒருவருக்கு 5 மூடை சிமெந்தே வழங்கப்படுகிறது. கடை ஊழியர் வாடிக்கையாளர்களின் வருகையைப் பார்த்து பட்டியலைப் பெற்று மக்கள் தொகைக்கு ஏற்ப சீமெந்து விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டு வழங்கப்படுகிறது.

வடகிழக்கில் வீடமைப்பு திட்டங்களிற்கு நிதி வழங்கப்படுவதுடன் குறுகிய காலத்தினுள் பூர்த்தி செய்ய நிர்ப்பந்தித்துவருவதும் குறிப்பிடத்தக்கது.