April 19, 2024

கூட்டமைப்பின் பங்காளிகள் கொழும்பில் சந்திப்பு?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.இந்த சந்திப்பானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் கொழும்பில் உள்ள இல்லத்தில் இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் கட்சியின் உள்ளக விவகாரங்கள் தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தப்படவுள்ளதாக அதில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சித் தலைவர்களில் ஒருவர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முகங்கொடுத்துள்ள சிக்கல்கள் மற்றும் பின்னடைவு என்பன தொடர்பிலும் விரிவாக ஆராயப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு மேலதிகமாக அதன் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களின் கையெழுத்திடப்பட்ட கடிதம் அனுப்பப்பட்டிருந்ததாக அண்மையில் தகவல்கள் வெளியாகின.

இந்த விடயம், தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் பாரிய சர்ச்சையினை ஏற்படுத்தியிருந்தது.

அது தொடர்பிலும் இன்றைய பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பின்போது கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.