April 19, 2024

திருகோணமலையில் ஆயுதாரிகளால் குடும்பஸ்தர் கடத்தல்!

 

திருகோணமலை வரோதயனகரில் 39 வயதுடைய மனோகரதாஸ் சுபாஸ் என்பவர் இல்லத்தில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை கடத்தப்பட்டுள்ளார்.ஆயுதங்களுடன் வாகனத்தில் வந்த சிலர் தாம் உப்புவெளி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாக வீட்டாரிடம் தெரிவித்துவிட்டு குறித்த நபரை அழைத்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்கள் விசாரிக்க சென்றபோது குறித்த நடவடிக்கையை தாம் முன்னெடுக்கவில்லை என பொலிஸ் நிலைய அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்த விடயம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்தியக் காரியாலயத்தில் அவரது மனைவி மற்றும் தாயார் முறைப்பாடு செய்துள்ளனர்.

இவ்வாறு கடத்தப்பட்டவர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையாகி பல வருடங்களாக சிறு கைத்தொழிலை மேற்கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியாத நிலையில் அவரை தேடிக் கண்டுபிடிப்பதற்கு உதவி வழங்குமாறு மனைவி மற்றும் தாயார் கோரிக்கை விடுத்துள்ளனர்