April 23, 2024

கொழும்பு டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தை ஊடாக வெள்ளவத்தை வரை 4 வழிப்பாதையாக விரிவு படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும்

கொழும்பு -ஹொரண வீதியில் பாமன்கடை – ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி மாவத்தை – டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தை ஊடாக வெள்ளவத்தை வரை 4 வழிப்பாதையாக விரிவுபடுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் வீதியின் நிர்மாணப் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாக ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ,

இந்த வீதியை விஸ்தரித்து அபிவிருத்தி செய்தல் மற்றும் பாமன்கடை பாலத்தை விஸ்தரித்தல் என்பவற்றின் மூலமாக தற்பொழுது பாமன்கடை -ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி மாவத்தை ஊடாக ஒரு வழியாக (One-way) பயணம் செய்யும் வாகனங்களுக்கு இரு திசைகளிலும் பயணம் செய்வதற்கு வாய்ப்பு ஏற்படும் . அத்தோடு கொஹூவல மற்றும் பாமன்கடை நகரங்களில் காணப்படும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு இதன் மூலம் தீர்வு கிடைக்கும் .

வீதியின் இந்த பகுதிகளையும் விரிவுபடுத்தி அபிவிருத்தி செய்தல் மற்றும் பாமன்கடை பாலம் நிர்மாணிப்பு என்பன வீதி அபிவிருத்தி அதிகார சபை சபையின் தெற்கு வீதி இணைப்புத் திட்டத்தால் (SRCP) முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு ரூ. 210 மில்லியன் செலவாகும் என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கூறினார்.