April 20, 2024

ஐ.நாவில் கோட்டாபயவின் பகிரங்க அறிவித்தல் – சிறிலங்காவிலிருந்து வெளிவரும் மற்றுமொரு தகவல்

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரை சந்தித்த போது புலம்பெயர் தமிழர்களுடனான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். இது மிகவும் ஆக்கபூர்வமான வெளிப்பாடாகும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்றைய தினம் இணையவழியூடாக நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

யுத்த காலத்தில் காணாமல் போனோருக்கு என்ன ஆயிற்று என்பதற்கு என்னால் பொறுப்பான பதிலை வழங்க முடியாது. இது தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரை சந்தித்த போது புலம்பெயர் தமிழர்களுடனான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். இது மிகவும் ஆக்கபூர்வமான வெளிப்பாடாகும்.

நாடாளுமன்றத்திலும் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. எவ்வாறிருப்பினும் குறிப்பிட்ட ஒரு நபரை சுட்டிக்காட்டி அவருக்கு என்ன ஆயிற்று என்று கூறுவது கடினமாகும். எனினும் இது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மறைக்கப்படக் கூடிய விடயமல்ல.

ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் இது தொடர்பில் சரியான தகவல்களை வெளிப்படுத்த முடியும். சில இடங்களில் காணாமல் போனதாக கருதப்படும் நபர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று அரசியல் அந்தஸ்து பெற்று அங்கு வாழ்கின்றனர். ஆனால் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இவ்வாறு நடப்பதில்லை.

தமது பிள்ளைகள் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் ஒவ்வொரு ஆண்டும் கண்ணீர் சிந்துகின்றனர். இவர்கள் அனைவரும் நாட்டு பிரஜைகளாவர். எனவே இது தொடர்பில் பொறுப்புடன் செயற்பட வேண்டியுள்ளது. ஆனால் இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை.

ஒன்றிணைந்த தேடலின் ஊடாகவே இதற்கான தீர்வைப் பெற முடியும். நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற ரீதியில் இது போன்றதொரு நிலைமை மீண்டும் ஏற்படாமல் அனைவரும் செயற்பட வேண்டும் என்பதே இதற்கான இறுதி பதிலாகும் என்றார்.