März 28, 2024

சிங்கள ஆமியை சிங்கள மக்களும் புரிந்துகொள்வர்!

கொரோனாவை காரணம் காட்டி அவசரகால நிலையை அறிவித்துள்ளதன் மூலம் கோத்தபாய ராஜபக்ச தமக்கெதிராக மக்கள் கிளர்ந்தெழ ஆயத்தமாகின்றார்கள் என்பதை அறிந்து கொண்டு அவர்களை அடக்கி ஆள அவசரகாலச் சட்டத்தை அவர் தற்போது உபயோகித்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உண்மையில் இவ்வாறான சந்தர்ப்பத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய சட்டம் அனர்த்த முகாமைத்துவச் சட்டம். அதன் கீழ் ஒரு செயலணியை நிறுவி மருத்துவ ஆலோசனைகளுக்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிலிருந்து இலங்கை ஜனாதிபதி ஆரம்பத்திலேயே தவறிவிட்டார். பல குற்றங்களை அவர் புரிந்துள்ளார் எனவும் சி.வி.விக்கினேஸ்வரன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ செயலணியை இதுவரையில் நியமிக்காமை.துறைசார் நிபுணர்களை வைத்து இதுவரையில் கட்டுப்படுத்த தவறியமை,ஆயுதமேந்தி மக்களைக் கொல்லும் இராணுவத்தை கொனேராவை கட்டுப்படுத்த நியமித்தமை மற்றும் கொரோனாவை காரணம் காட்டி அவசரகால நிலையை ஏற்படுத்தி சர்வதிகாரத்திற்கு வித்திட்டமை என கோத்தபாய ராஜபக்சவின் தவறுகள் பல தொடர்கின்றது.

ஏற்கனவே பயங்கரவாத் தடைச்சட்டம் அமுலில் உள்ளது. அடுத்து கொரோனவைக் கட்டுப்படுத்த இராணுவத்தை அழைத்து அவர்கள் எங்கும் வியாபித்திருக்கின்றார்கள். மூன்றாவதாக அவசரகாலச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்துள்ளார்.

தமக்கெதிராக மக்கள் கிளர்ந்தெழ ஆயத்தமாகின்றார்கள் என்பதை அறிந்து கொண்டு அவர்களை அடக்கி ஆள அவசரகாலச் சட்டத்தை உபயோகித்துள்ளார். இது சர்வாதிகாரத்திற்கு முக்கிய படி என்பதில் எந்தவித ஐயமும் இருக்க முடியாது. இராணுவம் என்றால் என்ன என்பதை இனி சிங்கள மக்கள் அறிந்து கொள்வார்கள் எனவும்; சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.