März 29, 2024

மட்டக்களப்பு மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட இன்னும் பல சிறுமிகள் – சாணக்கியன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட இன்னும் பல சிறுமிகள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கும் சேர்த்து நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டு ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் கூட இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்னால் ஒரு சகோதரர் கொலை செய்யப்பட்டார். அந்த விசாரணைக்கு என்ன நடந்தது என்பது இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது.

மட்டக்களப்பில் இந்த கொலைக்கு யாராவது அரசியல்வாதிகள் குரல் கொடுத்து இருக்கின்றார்களா? தீர்வினை பெற்று கொடுக்க வேண்டியவர்கள் வீதியில் நின்று போராட்டம் செய்வது வேடிக்கையாக இருக்கின்றது.

அரசாங்க அமைச்சர்களும் போராட்டம் நடத்துகின்றனர். ரிஷாத் பதியுதீனின் வீட்டில் மரணமடைந்த சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும். அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

முதலாவதாக அந்த சிறுமிக்கான நீதி கண்டறியப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தவன் நான். இரு சமூகங்களுக்கும் இடையே குழப்பத்தை ஏற்படுத்த முனையும் இந்த ஒட்டு குழுவினர் ஏன், மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட இன்னும் பலர் இருக்கின்றமை தொடர்பில் எல்லாம் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை என்ற கேள்வியை நான் எழுப்ப விரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.