April 19, 2024

வட்டுவாகலில் போராட்டம்: உள்ளே அளவீட்டு பணிகள்!

கொழும்பிலிருந்து தருவிக்கப்பட்ட சிங்கள நில அளவையாளர்கள் சகிதம் வட்டுவாகலில் நிலஅளவை பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வெளியே முற்றுகையிட்டுள்ள மக்களின் எதிர்ப்பையும் மீறி வட்டுவாகலில்

கடற்படைக்கு காணி சுவீகரிப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளது.

இதனிடையே போராட்டகார்களை ஏமாற்றி கடற்படை வாகனத்தில் உள்ளே அழைத்துச் செல்லப்பட்ட நிலஅளவையாளர்கள் அளவீட்டு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனிடையே வட்டுவாகல் ஊடான வீதியை மறித்து மக்கள் போராட்டத்தினை முன்னெடுப்பதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

 

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் பகுதியில்  மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, மீண்டும் கடற்படையினரின் தேவைக்காக 617 ஏக்கர் பொது மக்களின் காணியை சுவீகரிப்பதற்காக காணி அளவீடு செய்ய இன்று நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

தேசிய பாதுகாப்பை காரணங்காட்டி, ஆயிரக்கணக்கான பொதுமக்களின் காணிகள் இராணுவத்தினராலும் கடற்படையினராலும் அபகரிக்கப்படுகின்றன. வட்டுவாகல் பகுதியில் 617 ஏக்கர் காணிகளை கையகப்படுத்தும் முயற்சியே தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளது.