April 20, 2024

யாழில் இளைஞர்கள் மீது தாக்குதல்

யாழ்.உடுப்பிட்டி – நாவலடி பகுதியில் வீதி ஓரத்தில் கதைத்துக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்ற வாள்வெட்டு குழு ரவுடிகள் தப்பிச்சென்றுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், 4 பேர் தலைமறைவாகியுள்ளனர். இதனையடுத்து தலைமறைவானவர்களை கைது செய்வதற்கு வல்வெட்டித்துறை பொலிஸார் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

உடுப்பிட்டி நாவலடியில் வீதியில் கதைத்துக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றது. இந்தச் சம்பவம் கடந்த 20ம் திகதி இரவு இடம்பெற்ற நிலையில் அது தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவரை கடந்த வாரம் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

பின்னர் மற்றொரு சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டார். 24 வயதுடைய அவர் நேற்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இதேவேளை இரண்டாவது சந்தேக நபரிடம் வாள் ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் தலைமறைவாகி உள்ள நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.