April 19, 2024

மேடையிலேயே கடைசி மூச்சை விட்ட கலாமின் ஆறாம் ஆண்டு நினைவு தினம்! கண் கலங்கும் தருணம்!

கனவு காணுங்கள் எனக்கூறி மறைந்த பின்பும் இளைஞர்களின் உந்துசக்தியாக திகழ்பவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம். உலகமே உற்றுநோக்கிய தமிழரான அவரது 6-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.

தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள ராமேஸ்வரத்தில் ஒரு படகோட்டியின் மகனாக 1931-ஆம் ஆண்டு பிறந்தார் அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல்கலாம்.

சிறு வயதிலேயே வறுமையை எதிர்கொண்ட அவர், பள்ளி கல்விக்கு இடையில் சைக்கிளில் சென்று செய்தித்தாள்கள் விநியோகம் செய்து வந்தார்.

எனினும் படிப்பு மீதான கவனம் மட்டும் சிதறவில்லை. சென்னை எம்.ஐ.டி.யில் விண்வெளி பொறியியல் படிப்பு முடித்த அவர் நாட்டிற்கான அறிவியலை நோக்கி தனது அறிவை செலுத்தினார். விண்வெளி, தேச பாதுகாப்பு, அணு ஆற்றல் என 3 துறைகளிலும் ஒருசேர உழைத்த விஞ்ஞானி.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் பதவி வகித்தார். அப்போது பல ஏவுகணைகளை பறக்கவிட்டு உலக நாடுகள் மத்தியில் இந்தியாவை தலைநிமிரச் செய்தார். இதனால் ஏவுகனை நாயகன் என அழைக்கப்பட்டார்.

அப்துல்கலாம், இளைஞர்களிடம் ஏற்படுத்திய உற்சாகமும் தாக்கமும் மற்ற தலைவர்களில் இருந்து பெரிதும் மாறுபட்டது. கனவு காணுங்கள் எனக்கூறி ஒவ்வொரு இளைஞரின் மனதிலும் நம்பிக்கை விதையை விதைத்தார். விஞ்ஞானியாக இருந்து 2002ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவரான பின்பும் மாணவர்களிடம் உரையாற்றுவதை பெரிதும் விரும்பினார்.

தான் விரும்பி செய்யும் வேலை செய்து கொண்டிருந்த போதே, இயற்கை எய்திய மாமனிதர் அப்துல் கலாமே. கலாமின் இறுதி நாளில் மாணவர்களிடம் மேடையில் உரையாற்றி கொண்டிருந்தார்.

தான் சிறுது நேரத்தில் மரணிப்போம் என்று அறியாமலேயே மனம் விட்டு மாணவர்களிடம் உரையாடி கொண்டிருந்தார். 2015ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் மாணவர்களை ஊக்கப்படுத்தி கொண்டிருந்த போது மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இவரது நினைவு நாளில் ராமேஸ்வரத்தில் உள்ள இவரது மணிமண்டபத்தில், ஆண்டுதோறும் மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இவாது நினைவு நாளை முன்னிட்டு இவரது மணிமண்டபம் வண்ண வண்ண மின் விளக்குகளால் ஜொலித்தன. மேலும், ஏராளமானோர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இளைஞர்கள் என்ற தூண்கள் உள்ளவரை ஒவ்வொரு செல்களிலும் அப்துல்கலாம் வாழ்ந்து கொண்டே இருப்பார். நாம் கனவு காணும் ஒவ்வொரு நிமிடங்களிலும் அப்துல்கலாம் குரல் ஒலித்து கொண்டே தான் இருக்கும்…