April 24, 2024

திணறுகிறது முல்லைதீவு?

முல்லைதீவு மாவட்டத்தில் மீண்டும் கொரோனா உச்சம் பெற தொடங்கியுள்ளது. நேற்றைய தினம் வரையில் மாவட்ட செயலக தகவல்கள் அடிப்படையில்  முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த 820 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் இவர்களில் 85 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.132 குடும்பங்களை சேர்ந்த 328 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நாயாறு பகுதியில் தென்பகுதி மீனவர்கள் வசிக்கும் பகுதில் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .குறித்த நாயாறு பகுதியில் இதுவரை எத்தனை பேர் வசிக்கின்றனர் என்ற தகவல் கூட எவரிடமும் இல்லாத நிலையில் கடந்த 3 ம் திகதி முதல் இன்றுவரை குறித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளது .

இதனிடையே அண்மையில் தொற்று உறுதி செய்யப்பட்ட 34 பேரில் ஒருவர் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை உள்ள நிலையில் முடக்கப்பட்ட பகுதியில் இருந்து புத்தளம் சென்றிருந்தார்

இவ்வாறு ஒருபுறமிருக்க இவர்களுடன் நேரடி தொடர்புடையவர்களை இனங்காண்பதற்கு முன் எதிர்ப்பு நடவடிக்கை என அனைவரும் ஓரிடத்தில் ஒன்று கூடினர் இதனால் தொற்று பரவல் அதிகரிக்கவே வாய்ப்பிருந்தது

இவ்வாறான சிக்கலில் 21 நாட்களில் தனிமைப்படுத்தலில் இருந்து குறித்த பகுதி விடுவிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது

இவர்களில் நேரடி தொற்றார்கள் யார் என்பதை இனங்காண முடியாது சுகாதார துறை திண்டாடுகிறது. நேரடி தொடர்பாளர்களை வேறு இடத்தில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது .சுமார் இரண்டு மூன்று ஏக்கர் பரப்பளவுக்குள் 850க்கு மேற்பட்டவர்கள் மிக நேருக்கமாக வாழ்ந்தனர். எனவே இவர்களில் இருந்து தொற்றாளர்கள் உருவாகவும் இவர்களால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் தொற்றவும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

இரண்டாவதாக  முல்லைத்தீவு இலங்கை போக்குவரத்து சபை நடத்துநர் (யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்) ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இவர் முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய் , துணுக்காய் உள்ளிட்ட பல்வேறு வழித்தடத்தில் அண்மை நாட்களில் கடமையில் ஈடுபட்டுள்ளார் .அதனைவிட நேற்றைய தினமும் முல்லைத்தீவு சாலைக்கு வந்து சென்றுள்ளார் எனவே இதனாலும் தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளது .

மூன்றாவதாக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மையில் வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்களால் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முக்கியஸ்தராக பலராலும் பேசப்படும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இவர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் கிராம அலுவலர் ஒருவர் உள்ளிட்டவர்கள் காணிப் பிணக்கு ஒன்றை பார்வையிட வாகனத்தில் ஒன்றாக பயணித்துள்ளனர் இந்நிலையில் இன்று பிரதேச செயலக முக்கியஸ்தர் ஒருவர் உள்ளிட்ட பலரிடம் கொரோனா அறிகுறிகள் காணப்படுவதாக தெரிவித்து பொதுமக்கள் தினமான இன்று பிரதேச செயலகத்துக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை.

கிராம அலுவலர்களை கிராமங்களில் கடமையாற்ற பணிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டு தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது இந்த தொற்று பரவலும் பாரிய அளவிலான பரவலாக மாறக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.