April 25, 2024

குறையும் தடுப்பூசி பாதுகாப்பு… சுவிட்சர்லாந்தில் இருந்து வெளிவரும் முக்கிய தகவல்

சுவிட்சர்லாந்தில் முழுமையாக தடுப்பூசி போட்டவர்களில் 300 பேர் கொரோனாவுக்கு இலக்கான நிலையில், 18 பேர் மரணமடைந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்ட 14 நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 300 என தெரிய வந்துள்ளது.

இதில் 78 பேர் தீவிர பாதிப்பால் மருத்துவமனையை நாடியுள்ளனர். மட்டுமின்றி 18 பேர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரும் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

சுவிஸில் ஜூலை 21ம் திகதி வரையில் 8,747,637 பேர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 3,985,251 சுவிஸ் மக்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளனர்.

உலகில் முதன்முறையாக அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ள இஸ்ரேல் நாட்டிலும் தற்போது கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

டெல்டா மாறுபாடு காரணமாகவே, தடுப்பூசியின் பாதுகாப்பு குறைவதாக நிபுணர்கள் தரப்பில் சந்தேகம் எழுந்துள்ளது.

தற்போது வெளியாகும் தரவுகளின் அடிப்படையில், இஸ்ரேல் நாட்டில் டெல்டா மாறுபாடு பெருமளவில் பரவி வருவதாக தெரிய வந்துள்ளது.

அதே நிலை தான் தற்போது சுவிட்சர்லாந்திலும். இருப்பினும் மிக ஆபத்தான கட்டத்தை நோக்கி டெல்டா மாறுபாடு நகராது என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.

முழுமையான தடுப்பூசியால் அதிக ஆபத்தின்றி தற்காத்துக் கொள்ளலாம் எனவும், பாதிப்புக்கான வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில், பிரித்தானியா, இந்தியா, கனடாவின் சில மாகாணங்கள் என பூஸ்டர் டோஸ் தொடர்பில் விவாதிக்கத் தொடங்கியுள்ளன.