April 18, 2024

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் துப்பாக்கி சூடு- 5 பேர் பலி!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் துப்பாக்கி சூடு-  5 பேர் பலி!

அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் குறையவில்லை.

இந்த நிலையில் அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. கலிபோர்னியா மாகாணம் வடமேற்கில் உள்ள பேக்கர்ஸ் பீல்டில் உள்ள ஒரு வீட்டில் மர்மநபர் ஒருவர் துப்பாக்கி முனையில் சிலரை பிணை கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கலிபோர்னியாவின் துணை ஷெரீப் கேம்பஸ் தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். அந்த வீட்டை சுற்றி வளைத்து பிணை கைதிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வீட்டின் கூரை மீது ஏறி உள்ளே நுழைந்தனர். அப்போது மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் போலீஸ் அதிகாரி கேம்பஸ் உயிரிழந்தார்.

இதையடுத்து மர்மநபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். வீட்டுக்குள் ஒரு பெண்ணும், அவரது இரண்டு மகன்களும் உயிரிழந்து கிடந்தனர். அவர்கள், துப்பாக்கி சூடு நடத்திய நபரின் மகன்கள் மற்றும் அவர்களது தாய் என்று கூறப்படுகிறது.

மேலும் வீட்டில் இருந்து இரண்டு சிறுமிகள் உள்பட 4 பெண்கள் பத்திரமாக தப்பி வெளியே வந்தனர். இவர்கள் துப்பாக்கி சூட்டில் பலியானர்களின் உறவினர்களா? என்பது குறித்து உறுதிபடுத்தப்படவில்லை.

மேலும் துப்பாக்கி சூடு நடத்திய 41 வயதான நபரின் பெயரையும் போலீசார் வெளியிடவில்லை. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.