März 29, 2024

யாழ்ப்பாணத்தில் சிங்கள அரசாங்க அதிபர்: இரா.சம்பந்தன் கடும் ஆட்சேபம்!

யாழ்ப்பாணத்தில் சிங்கள அரசாங்க அதிபர்: இரா.சம்பந்தன் கடும் ஆட்சேபம்!

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக சிங்களவர் ஒருவரை நியமிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

வடக்கு பிரதம செயலாளராக சிங்களவர் நியமிக்கப்பட்டுள்ள சூழலில், மாவட்ட செயலாளராகவும் சிங்களவரை நியமிக்க மேற்கொள்ளும் ஜனநாயக விரோத நடவடிக்கை குறித்து அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில்,

எனக்கு அறிவிக்கப்பட்ட வகையில் மிக விரைவில்,யாழ் மாவட்டத்திற்கு தமிழ் பேச முடியாத ஒருவரை மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர் பதவியிக்கு நியமிக்கப்பட இருக்கிறார்.

நீங்கள் அறிந்திருக்கின்ற பிரகாரம், யாழ் மாவட்டத்தில் 95% மானவர்கள் தமிழ் பேசும்
சமூகத்தினராவர், மேலும் 10 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய நிர்வாகத்தினை சேர்ந்தவர்களும் தமிழ் பேசும் சமூகத்தினை சார்ந்தவர்களாவார்கள்.

இந்த பின்னணியில் தமிழ் பேச தெரியாத ஒரு அரச உத்தியோகத்தரை மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபராக யாழ் மாவட்டத்திற்கு நியமிப்பது பொருத்தமற்ற ஒரு விடயமாகும். மேலும் இது ஜனநாயக விரோதமான செயலாகும்.

மாவட்டத்திலுள்ள உயர் பதவியில் இருக்கும் அரச உத்தியோகத்தர் தமிழ் பேசும் ஒருவராக இருக்கும் சந்தர்ப்பத்தில்தான் அவருடனான வாய்மூல மற்றும் எழுத்ததுமூல தொடர்பாடல்கள் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான பூர்வீக இடங்களான வடக்கு மற்றும் கிழக்கு

மாகாணங்களில் புதிய அரசியலமைப்பின் ஊடாக அதியுச்ச அதிகார பகிர்வினை வழங்க அரசாங்கம் முயற்சிகளை எடுக்கும் சந்தர்ப்பத்தில் இத்தகைய செயற்பாடுகள் எதிர்மறையான விளைவினையும் மக்களால் வரவேற்கப்பட முடியாத ஒன்றாகவுமே காணப்படுகின்றது.

எனவே அத்தகைய பிரேரணையை மீளாய்வு செய்து, மேற்குறித்த விடயங்களை கருத்திக்கொண்டு யாழ் மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபராக அனுபவமும் செயற்திறனுமுள்ள தமிழ் பேசும் ஒரு அரச அதிகாரியை நியமிக்குமாறு நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.