April 19, 2024

யாழில் சுவாமி காவவும் புஞ்சி பண்டாக்கள்!

தாயகத்தில் ஒருபுறம் மக்கள் ஒருவேளை உணவிற்கு கஸ்டப்பட புலம்பெயர்  பணத்தில் சிலர் அடித்துவருகின்ற அலப்பறைகள் கவனத்தை ஈர்த்துவிடுகின்றது.

ஏற்கனவே இலங்கை இராணுவத்தை கொண்டு தேர்த்திருவிழா நடத்திய அச்சுவேலி பகுதியில் தற்போது இராணுவத்தினர் சாமி காவிய கதை அரங்கேறியுள்ளது.

ஆலயத்தினுள் மேலங்கிகளுடன் ஆண்கள் செல்ல சில ஆலயங்களில் தடை விதிக்கப்பட்ட நிலையில் சிங்கள இராணுவத்தினர் மேலங்கிகளுடன் சென்று வழிபடடுள்ளனர்.

அச்சுவேலி உலவிக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்திர அலங்கார உற்சவம் நடைபெற்று வந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை தேர்த்திருவிழா இடம்பெற்றது.

கொரோனா அச்சம் காரணமாக சிறிய தேரில் பஞ்சமுக பிள்ளையார் எழுந்தருளி உள்வீதி உலா வந்தார். அதன் போது எழுந்தருளி பிள்ளையாரை இராணுவத்தினர் பிள்ளை தண்டில் காவி உள்வீதி உலா வந்தனர்.

கொரோனா அச்சம் காரணமாக ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் பலரும் ஆலயத்தினுள் உள்நுழைய அனுமதிக்கப்படாத நிலையில் பல இராணுவத்தினர் ஆலயத்தினுள் சென்று வழிபாடுகளை மேற்கொண்டதுடன்  சுவாமி காவியும் உள்ளனர்.

ஆலயத்திற்கு அருகில் வசிக்கும் பலரும் ஆலயத்தின் வெளியே நிற்க இராணுவத்தினர் ஆலயத்தினுள் சென்று வழிபாடுகளை மேற்கொண்டு சுவாமி காவியுமுள்ளனர்.

இத்திருவிழா பின்னணியில் புலம்பெயர் தரப்பினை சேர்ந்த சிலர் அனுப்பிய பணமிருந்துள்ளதாக மக்கள் பேசிக்கொண்டனர்.